சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடந்தது விண்ணதிர்ந்த ‘அரோகரா’ கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்


சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடந்தது விண்ணதிர்ந்த ‘அரோகரா’ கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 2 Nov 2019 10:39 PM GMT (Updated: 2 Nov 2019 10:39 PM GMT)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விண்ணதிர்ந்த ‘அரோகரா‘ கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர்,

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்சீரலைவாய் என்று அழைக்கப்படும் திருச்செந்தூரில் முருக பெருமான் சுப்பிரமணிய சுவாமியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். முருக பெருமான் சூரபத்மனை வென்று, தேவர்களைக் காத்த இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

அதேபோல் இந்த ஆண்டும் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 28-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கி இருந்து விரதம் இருந்தனர்.

விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் யாகசாலை பூஜைகள் நடந்தன. மதியம் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலையில் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.

இரவில் சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரிப்பிரகாரம் வழியாக வீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் கோவில் கலையரங்கில் பக்தி சொற்பொழிவு நடைபெற்றது.

6-ம் நாளான நேற்று மாலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடந்தது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலையில் உச்சிகால அபிஷேகம் நடந்தது.

மதியம் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடனும், மேளவாத்தியங்களுடனும் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.

மாலையில் ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் இருந்து, சூரபத்மன் தனது படைவீரர்களுடன் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து, கோவில் கடற்கரைக்கு வந்து சேர்ந்தான். தொடர்ந்து மாலை 4.35 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் வண்ண மலர்களாலான மாலைகள் அணிந்து அலங்காரத்துடன் கையில் வேல் ஏந்தி, சூரபத்மனை வதம் செய்ய கடற்கரைக்கு புறப்பட்டார்.

முதலில் மாயையே உருவாக கொண்ட யானை முகம் கொண்ட தாரகாசூரன், தனது பரிவாரங்களுடன் முருக பெருமானிடம் போரிடுவதற்காக, அவரை மூன்று முறை சுற்றி வந்து, சுவாமிக்கு எதிராக நின்றான். மாலை 5.10 மணிக்கு முருக பெருமான் வேல் கொண்டு தாரகாசூரனை வதம் செய்தார்.

அதன்பிறகு கன்மமே உருவாக கொண்ட சிங்கமுகாசூரன், முருகபெருமானை வலமிருந்து இடமாக மூன்று முறை சுற்றி வந்து, நேருக்கு நேர் போரிட தயாரானான். மாலை 5.30 மணிக்கு சிங்கமுகாசூரனையும் முருகபெருமான் வேலால் வதம் செய்தார்.

தனது சகோதரர்களின் இழப்பால் கோபம் அடைந்த ஆணவமே உருவான சூரபத்மன் தனது படைவீரர்களுடன் வேகமாக முருக பெருமானுடன் போர்புரிய வந்தான். தொடர்ந்து மாலை 5.45 மணிக்கு முருக பெருமான் வேல் எடுத்து சூரபத்மனை சம்ஹாரம் செய்தார்.

இறுதியாக மாலை 6 மணிக்கு மாமரமும், சேவலுமாக உருமாறி வந்த சூரபத்மனை சேவலும், மயிலுமாக மாற்றி முருக பெருமான் ஆட்கொண்டார். மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் முருக பெருமான் வைத்து கொண்டார். அப்போது முருக பெருமானுக்கு தீபாராதனை நடைபெற்றது.

சூரசம்ஹாரம் நிகழ்ந்தபோது, வானத்தில் 3 கருடன்கள் மூன்று முறை வட்டமிட்டன. அப்போது கூடியிருந்த பல லட்சக்கணக்கான பக்தர்கள் ‘கந்தனுக்கு அரோகரா‘, ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா‘ போன்ற பக்தி கோஷங்களை விண்ணதிர்ந்தபடி எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

சூரசம்ஹாரம் முடிந்ததும் கடற்கரையில் உள்ள சந்தோஷ மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளினார். அங்கு சினம் தணிந்த சுவாமிக்கும், வள்ளி-தெய்வானை அம்பாள்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் கிரிப்பிரகாரம் வழியாக வலம் வந்து, கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதியில் எழுந்தருளினார்.

அங்குள்ள கண்ணாடியில் தெரிந்த சுவாமியின் பிம்பத்துக்கு அபிஷேகம் (சாயாபிஷேகம்) நடந்தது. பின்னர் விரதம் இருந்த பக்தர்களுக்கு யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட தகடுகள் வழங்கப்பட்டன.

விழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, உதயகுமார், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆதிகேசவலு, மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் சுந்தர், புகழேந்தி, தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விசுவநாதன், நீதிபதி சிவஞானம், மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி, போலீஸ் ஐ.ஜி.க்கள் சண்முக ராஜேசுவரன், வரதராஜூ,

கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி, கோவில் செயல் அலுவலர் அம்ரித், எம்.எல்.ஏ.க்கள் சண்முகநாதன், சின்னப்பன், சண்முகையா, ரெட்டியார்பட்டி நாராயணன், தூத்துக்குடி ஆவின் தலைவர் சின்னத்துரை, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், காயல்பட்டினம் கூட்டுறவு சங்க தலைவர் பூந்தோட்டம் மனோகரன், இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ரவி கிருஷ்ணன், தெற்கு மாவட்ட செயலாளர் சக்திவேல், ஒன்றிய தலைவர் இசக்கிமுத்து, தொழில் அதிபர்கள் தங்கராஜ், ரமணி, ஆனந்த் நாராயணன், திருநாவுக்கரசு, அருள், சீனி பண்ணையார், ஆத்தூர் ரமேஷ், என்ஜினீயர் நாராயணன் உள்பட லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சூரசம்ஹாரத்தை காண்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சக்கணக் கான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். சூரசம்ஹாரம் நடைபெற்றதும், பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சூரசம்ஹாரத்தை பக்தர்கள் எளிதில் காணும் வகையில், கோவில் வளாகத்தில் ஆங்காங்கே பெரிய டிஜிட்டல் திரைகள் மற்றும் டி.வி.க்கள் வைக்கப்பட்டு இருந்தன.

பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. நகர் முழுவதும் ஆங்காங்கே குடிநீர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. ஏராளமான தன்னார்வலர்கள் பக்தர்களுக்கு பானகாரம், குளிர்பானம், அன்னதானம் போன்றவற்றை வழங்கினர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருச்செந்தூர்-நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. சூரசம்ஹாரத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது.

போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில், திருச்செந்தூர் புறநகர் பகுதிகளில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. பச்சை நிற அனுமதிச்சீட்டு பெற்ற வாகனங்கள் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் நகருக்குள் அனுமதிக்கப்பட்டன. மற்ற வாகனங்களை புறநகரில் நிறுத்த இடவசதி செய்யப்பட்டு இருந்தது. அங்கு வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன.

கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் 100-க்கு மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியும், பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்தும், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கடலில் புனித நீராடும் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாதவாறு, மிதவை தடுப்புகள் கடலில் மிதக்க விடப்பட்டு இருந்தன. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், தீயணைப்பு வீரர்கள், நீச்சல் வீரர்கள் படகுகளில் தயார் நிலையில் இருந்தனர்.

தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முக ராஜேசுவரன், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் ஆகியோர் மேற்பார்வையில், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் தலைமையில், சுமார் 3 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

7-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்பாள் தபசு காட்சிக்கு எழுந்தருளுகிறார். காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.

மாலை 5 மணிக்கு சுவாமி தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சிக்கு புறப்படுகிறார். தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, தெப்பக்குள தெரு சந்திப்பு பகுதியில் அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுத்தலும், தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெறும். பின்னர் இரவு 11 மணிக்கு கோவில் ராஜகோபுரம் அருகே உள்ள மண்டபத்தில் வைதீக முறைப்படி, சுவாமி குமரவிடங்க பெருமான்-தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் அம்ரித் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

* கடற்கரையில் சூரபத்மனை வதம் செய்ய வந்த சுவாமி ஜெயந்திநாதருக்கு பக்தர் ஒருவர் மயில் தோகையாலான விசிறியை வீசியவாறு வந்தார்.

* சுவாமி ஜெயந்திநாதருக்கு முன்பாக சிவனடியார்கள், முருக பக்தர்கள் மேளவாத்தியங்கள், கொம்பு வாத்தியம் முழங்கியவாறும், திருச்சங்கு ஊதியவாறும் வந்தனர்.

* கடற்கரையில் உள்ள மூவர் சமாதியில் ஏராளமான பக்தர்கள் கந்தசஷ்டி கவசம் மற்றும் முருக பெருமானின் பாடல்களை பாடியவாறு இருந்தனர்.

* கோவில் உள்பிரகாரத்தில் யாகசாலையின் பின்புறம் 6 அடி உயரமும், 5 கிலோ எடையும் கொண்ட பிரமாண்ட ஊதுபத்தி ஏற்றப்பட்டது. அது 3 விதமான நறுமணங்களை கமழ்ந்தது.

* சூரபத்மன் ஒவ்வொரு முகமாக உருமாறி, முருகபெருமானுடன் போர் புரியும் இடங்களை பக்தர்கள் அறியும் வகையில், அங்கு டிஜிட்டல் பேனரில் எழுதி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் கடற்கரை முழுவதும் பக்தர்கள் அமர்ந்து, சூரசம்ஹார நிகழ்ச்சியை கண்டுகளித்து, சாமி தரிசனம் செய்தனர்.

* கீழ ரத வீதியில் இருந்து தற்காலிக பஸ் நிலையங்களுக்கு மினி பஸ்கள் இயக்கப்பட்டதால், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் பெரிதும் பயன் அடைந்தனர்.

Next Story