கண்மாயில் மூழ்கி மாணவி சாவு - குளிக்க சென்ற போது பரிதாபம்


கண்மாயில் மூழ்கி மாணவி சாவு - குளிக்க சென்ற போது பரிதாபம்
x
தினத்தந்தி 3 Nov 2019 10:00 PM GMT (Updated: 3 Nov 2019 6:58 PM GMT)

காரைக்குடி அருகே கண்மாயில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி மாணவி இறந்தார்.

காரைக்குடி, 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த பெரிய கோட்டை அருகே உள்ள ஆவத்தான் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நாகமுத்து. இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் கவிப்பிரியா (வயது 11). இவர் அந்த பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் கவிப்பிரியா அந்த பகுதியில் உள்ள கண்மாய்க்கு குளிக்க சென்றார். அங்கு தனது ஆடைகளை துவைத்து காயபோட்டு விட்டு கண்மாயில் குளிக்க இறங்கியுள்ளார். அப்போது அவர் ஆழம் அதிகமான பகுதிக்கு சென்றுவிட்டார்.

ஆனால் கவிப்பிரியாவுக்கு நீச்சல் தெரியாத காரணத்தால், அவர் நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடினார். இதை பார்த்த அந்த பகுதியில் இருந்தவர்கள் விரைந்து வந்து மாணவியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மாணவி கவிப்பிரியா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சாக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாக்குலின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story