அதிகாலை நடைபயிற்சிக்கு ஏதுவாக: மெரினா சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை


அதிகாலை நடைபயிற்சிக்கு ஏதுவாக: மெரினா சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 3 Nov 2019 10:30 PM GMT (Updated: 3 Nov 2019 7:40 PM GMT)

மெரினா சர்வீஸ் சாலையில் அதிகாலை நடை பயிற்சிக்கு ஏதுவாக இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை,

அலைகள் ஆர்ப்பரிக்கும் மெரினா கடற்கரை அதிகாலை நடைபயிற்சிக்கு ஏற்ற சிறந்த இடமாக கருதப்படுகிறது. திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சாந்தோம், பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், ராஜா அண்ணாமலைபுரம், அண்ணாசாலை உள்பட பல பகுதிகளில் இருந்து இளைஞர்கள், பெண்கள், முதியோர்கள் என ஏராளமானோர் நடை பயிற்சிக்கு வருகிறார்கள்.

இதுதவிர யோகா, தியானம் செய்பவர்களும் மெரினாவுக்கு அதிகளவில் வருகிறார்கள். கராத்தே, சிலம்பம், ஸ்கேட்டிங் உள்ளிட்ட பயிற்சிகளில் ஈடுபட சிறுவர்களும் குவிந்து விடுவதால், அதிகாலையிலேயே மெரினா சர்வீஸ் சாலையில் ஏராளமானோர் திரண்டு விடுவார்கள்.

இந்தநிலையில் பொதுமக்களின் வசதிக்காகவும், விபத்துகளை தடுக்கும் நோக்கிலும் மெரினா சர்வீஸ் சாலையில் அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரையில் இருசக்கர வாகனங்கள் முதல் கார்கள் வரையிலான வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் காமராஜர் சாலையில் இருந்து சர்வீஸ் சாலை செல்லும் வழியில் தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளது. அந்த சமயத்தில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை கலங்கரை விளக்கம், மாட்டாங்குப்பம் ஆகிய பகுதிகளில் நிறுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் வாகனங்களை எங்கோ நிறுத்திவிட்டு மெரினா சர்வீஸ் சாலைக்கு வருவது சிரமமாக உள்ளது என்றும், இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமாவது அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மூத்த குடிமக்கள் போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறியதாவது:-

மெரினா சர்வீஸ் சாலையில் அதிகாலை நடைபயிற்சி மேற்கொள்ள எங்கள் வீடுகளில் இருந்து இருசக்கர வாகனங்களில் வருகிறோம். ஆனால் சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லாததால், திருவல்லிக்கேணியில் வாகனத்தை நிறுத்தி சாலையை கடந்து பின்னர் நடைபயிற்சி மேற்கொள்கிறோம். இது சிரமமாக இருக்கிறது.

சில சமயங்கள் ‘ஹெல்மெட்’ காணாமல் போன சம்பவங்களும் நிகழ்ந்திருக்கிறது. ஒரு பெண்ணின் ஸ்கூட்டர் ‘சீட்’ திறக்கப்பட்டிருந்த சம்பவமும் அரங்கேறியது. ‘வாட்டர் பாட்டில்’, துண்டு உள்ளிட்டவை வண்டியிலேயே வைத்துவிட்டு வரவேண்டியது உள்ளது. வண்டி பத்திரமாக இருக்குமா? என்ற அச்சத்திலேயே நடக்க வேண்டியது உள்ளது.

நடைபயிற்சி மேற்கொண்ட களைப்பில் மீண்டும் சாலையை கடந்து மோட்டார் சைக்கிள்களை தேடி செல்வது கஷ்டமாக உள்ளது. சர்வீஸ் சாலையில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளத்துக்கு வருவோர், பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்ள மெரினாவுக்கு வருவோர் சிரமம் அடைந்து வருகின்றனர்.

மெரினா சர்வீஸ் சாலையில் கார் போன்ற பெரிய வாகனங்களுக்கு தடை விதித்திருப்பது பரவாயில்லை. ஆனால் இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமாவது அனுமதி அளிக்கவேண்டும். இந்த விவகாரத்தில் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து எங்களின் சிரமங்களை போக்கும் வகையில், மெரினா சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி வழங்கவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story