தேசம் கடந்த காதல்: சீன பெண்ணை மணந்த சேலம் டாக்டர்


தேசம் கடந்த காதல்: சீன பெண்ணை மணந்த சேலம் டாக்டர்
x
தினத்தந்தி 3 Nov 2019 11:00 PM GMT (Updated: 3 Nov 2019 8:01 PM GMT)

ஆஸ்திரேலியா அரசு மருத்துவமனையில் பணிபுரியும் சேலம் டாக்டர், சீன பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சேலம்,

இரு மனங்கள் இணையும் காதல், பல நேரங்களில் சாதி, மதங்களை மட்டுமின்றி தேசங்களையும் கடந்து ஜோடிகளை இணைத்து விடுகிறது. தேசம் கடந்த காதல் திருமணங்கள் சமீபகாலமாக அங்கொன்றும், இங்கொன்றுமாக அரங்கேறி வருகின்றன.

அந்த வகையில் ஆஸ்திரேலியா நாட்டில் பணிபுரியும் சீன பெண்ணை அங்கு பணிபுரிந்த சேலம் டாக்டர் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர்களின் காதல் திருமணம் திருமணம் சேலத்தில் நேற்று நடந்தது.

சீன பெண்

இதுபற்றிய விவரம் வருமாறு:-

சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள மணக்காடு அன்பு நகரை சேர்ந்தவர் பரசுராமன். இவருடைய மகன் அருண்பிரசாத் (வயது 34). இவர் ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். அருண் பிரசாத்துக்கும் அங்கு உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரியாக பணியாற்றி வரும் சீனாவை சேர்ந்த கிறிஸ்டல் ஜியாங் (31) என்ற பெண்ணுக்கும் அறிமுகம் ஏற்பட்டது.

அவர்கள் இருவரும், பகுதிநேரமாக ஆஸ்திரேலிய நாட்டில் வேறு ஒரு இடத்தில் வேலை பார்க்கும்போது பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. அருண்பிரசாத், கிறிஸ்டல் ஜியாங்கிடம் தனது காதலைத் தெரிவித்தார். முதலில் காதலுக்கு மறுத்த கிறிஸ்டல் ஜியாங் பின்னர் காதலிக்க தொடங்கினார். இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர்.

சேலத்தில் திருமணம்

இதைத்தொடர்ந்து அருண்பிரசாத் சேலத்தில் உள்ள அவருடைய பெற்றோரிடம், சீன பெண்ணை தான் காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கு அருண் பிரசாத்தின் பெற்றோர் சம்மதம் தெரித்தனர். இதேபோல் கிறிஸ்டல் ஜியாங் அவருடைய பெற்றோரிடம் சம்மதம் பெற்றார்.

இவர்களது திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நேற்று காலை சேலம் ஜான்சன் பேட்டையில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் நடந்தது. இதையடுத்து திருமண வரவேற்பு ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் அருண் பிரசாத்தின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிறிஸ்டல் ஜியாங்கின் பெற்றோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

இந்த புதுமண தம்பதியினர் வருகிற 10-ந் தேதி ஆஸ்திரேலியாவுக்கு செல்வதாகவும், ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சீனாவில் இருவருக்கும் திருமண வரவேற்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.


Next Story