உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம்: ஒற்றுமையாக பணியாற்றினால் எளிதில் வெற்றி பெறலாம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு


உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம்: ஒற்றுமையாக பணியாற்றினால் எளிதில் வெற்றி பெறலாம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு
x
தினத்தந்தி 3 Nov 2019 10:45 PM GMT (Updated: 3 Nov 2019 8:34 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் கட்சி நிர்வாகிகள் ஒற்றுமையாக பணியாற்றினால் எளிதில் வெற்றி பெறலாம் என்று ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை,

உள்ளாட்சி தேர்தல் குறித்து கோவை புறநகர், மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவையில் உள்ள இதயதெய்வம் மாளிகையில் நடந்தது. புறநகர் மாவட்ட அவைத்தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஏ.கே.செல்வராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டி, அம்மன் அர்ச்சுனன், ஓ.கே.சின்னராஜ், எட்டிமடை சண்முகம், வி.பி.கந்தசாமி, கஸ்தூரிவாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

இந்த கூட்டம் மாநாடு போன்று உள்ளது. அ.தி.மு.க.வை யாரும் வீழ்த்த முடியாது. யார் வீழ்த்த நினைத்தார்களோ அவர்கள்தான் வீழ்ந்து போவார்கள். ஜெயலலிதா கட்சியை வழிநடத்தியபோது சறுக்கல்கள் வந்தன. கோவையில் ஜெயலலிதா பிரம்மாண்டமான அளவில் கூட்டத்தை நடத்தினார். அதன் பின்னர் மதுரை, திருச்சியில் கூட்டம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் ஆட்சியை நாம் பிடித்தோம்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இதுபோன்றுதான் நாமும் கூட்டம் போட்டோம். ஆனால் தி.மு.க.வினர் தவறான, பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்று விட்டனர். தி.மு.க. எப்போதுமே மக்களுக்கு எதுவுமே செய்வது இல்லை. விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் நமக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்து உள்ளது. இதனால் இந்தியாவே தமிழகத்தை திரும்பி பார்த்து உள்ளது.

அந்த வெற்றி கிடைக்க நீங்கள் எப்படி பணியாற்றினீர்களோ அதுபோன்று வர உள்ள உள்ளாட்சி தேர்தலிலும் பணியாற்ற வேண்டும். இதற்காக நீங்கள் ஒவ்வொருவரும் திண்ணை பிரசாரம் செய்து, வீடுகள்தோறும் சென்று நமது அரசு செய்து உள்ள நலத்திட்டங்களை எடுத்துக்கூறுங்கள். மிகக்கவனமாக பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு ஓட்டுகளும் மிக முக்கியம்.

முக்கியமாக பூத் கமிட்டி நன்றாக அமைக்க வேண்டும். இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை கட்சியில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். அதுபோன்று 18 வயது பூர்த்தியானவர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும். தற்போது பேனர் வைக்கக்கூடாது என்பதால் நமது அரசு நிறைவேற்றி உள்ள நலத்திட்டங்கள் குறித்து போஸ்டர் அடித்து ஒட்டுங்கள், சுவர் விளம்பரம் செய்யுங்கள்.

நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் கட்சி நிர்வாகிகள் ஒற்றுமையாக பணியாற்றினால் நாம் எளிதில் வெற்றி பெறலாம். உண்மையாக உழைத்தவர்களுக்கு பதவி நிச்சயம் தேடி வரும். வேட்பாளர்களை தேர்வு செய்யும்போது வெற்றி வாய்ப்பு உள்ளவர்களை தேர்வு செய்வது முக்கியம். யாரை வேட்பாளராக அறிவித்தாலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தான் வேட்பாளர்கள் என்று நினைத்து பணியாற்ற வேண்டும். அப்போதுதான் வெற்றிக்கனியை எளிதில் தட்டிச்செல்லலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டும், குடிமராமத்து பணிகள் உள்பட பல்வேறு பணிகளை கொடுத்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு பாராட்டுக்களை தெரிவிப்பது, மத்திய அரசிடம் இருந்து பல்வேறு தேசிய விருதுகளை பெற்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை பாராட்டுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் செ.ம.வேலுசாமி, தாமோதரன், மாவட்ட ஆவின் தலைவர் கே.பி.ராஜூ, சி.டி.சி.ஜப்பார், ஆதி நாராயணன், காமராஜ், வெள்ளலூர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story