திருமணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த குடிநீர் குழாய்களை கலெக்டர் ஆய்வு


திருமணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த குடிநீர் குழாய்களை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 3 Nov 2019 11:00 PM GMT (Updated: 3 Nov 2019 10:07 PM GMT)

திருமணிமுத்தாறில் ஏற்பட்ட வெள்ளபெருக்கால் சேதமடைந்த ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்ட குழாய்களை மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெண்ணந்தூர்,

திருமணிமுத்தாறில் ஏற்பட்ட வெள்ளபெருக்கால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வரும் ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் நகராட்சி, வெண்ணந்தூர், அத்தனூர், பிள்ளாநல்லூர் பேரூராட்சிகள் மற்றும் வெண்ணந்தூர் ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சிகளுக்கும் வழங்கப்படும் பிரதான குழாய்கள் சேதமடைந்தன.

வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், சப்பையாபுரம், ஆத்துபிள்ளையார் கோவில் பகுதியில் இதற்கு மாற்று பிரதான குழாய்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளையும், சேதமடைந்த குடிநீர் குழாய்களையும் மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விரைந்து முடிக்க உத்தரவு

மேலும் பணியினை விரைந்து முடிக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். பொதுப்பணிதுறை மூலம் திருமணிமுத்தாறில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணியையும் பார்வையிட்டு விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் சந்திரமோகன், உதவி நிர்வாக பொறியாளர் பாஸ்கரன், உதவி பொறியாளர் ராமநாதன், வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர், ராசிபுரம் தாசில்தார் பாஸ்கர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். 

Next Story