பசுவந்தனை அருகே, கல்லூரி மாணவர் விஷம் குடித்து சாவு


பசுவந்தனை அருகே, கல்லூரி மாணவர் விஷம் குடித்து சாவு
x
தினத்தந்தி 3 Nov 2019 10:15 PM GMT (Updated: 3 Nov 2019 10:30 PM GMT)

பசுவந்தனை அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஓட்டப்பிடாரம், 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அடுத்துள்ள பசுவந்தனை அருகே உள்ள பரமன்பச்சேரியை சேர்ந்தவர் முத்துசாமி. இவருடைய மகன் மகராஜன் (வயது 21). இவர் தூத்துக்குடி அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.இந்த நிலையில் நேற்று அவருடைய உறவினர் ஒருவருக்கு திருமணம் நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு நடந்த முகூர்த்த நிகழ்ச்சிக்கு செல்வதற்கு தனது தங்கையை மகராஜன் அழைத்து உள்ளார். அப்போது அவர் மது குடித்து விட்டு வந்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் அவரது தங்கையை திருமண வீட்டுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. இதனால், மகராஜனுக்கும் அவரது தந்தைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த மகராஜன் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வெளியில் ஓடினார். இதனை பார்த்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மகராஜனை பின்தொடர்ந்து ஓடினர். ஆனால் அவர் ஓடிக் கொண்டே விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக உறவினர்கள் மகராஜனை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மகராஜன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பசுவந்தனை போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமொழி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பசுவந்தனை அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story