பாளையங்கோட்டையில் வீடு புகுந்து துணிகரம்: ஆசிரியையிடம் 11 பவுன் நகை பறிப்பு


பாளையங்கோட்டையில் வீடு புகுந்து துணிகரம்: ஆசிரியையிடம் 11 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 3 Nov 2019 10:30 PM GMT (Updated: 3 Nov 2019 11:07 PM GMT)

பாளையங்கோட்டையில் வீடு புகுந்து துணிகரமாக ஆசிரியையிடம் 11 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை சேர்ந்தவர் வக்கீல் சிவசுப்பிரமணியன். இவருடைய மனைவி ராமசுந்தரி (வயது 32). இவர் தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். ஒரு கிராமத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கணவன், மனைவி புறப்பட்டனர்.

முன்னதாக இவர்கள் நேற்று முன்தினம் இரவு பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பிருந்தாவன் தெருவில் உள்ள ராமசுந்தரியின் தந்தை வேலு வீட்டுக்கு சென்று தங்கினர்.

நேற்று அதிகாலை இவர்கள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் நைசாக கதவை திறந்து உள்ளே புகுந்து உள்ளனர். அங்கு ராமசுந்தரியின் கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்க நகைகளை பறித் துக் கொண்டு வேகமாக தப்பிச்சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராமசுந்தரி கூச்சலிட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து கொள்ளையர்களை தேடினர். ஆனால் அவர்கள் தலைமறைவாகி விட்டனர். முன்னதாக வீட்டில் தொங்கவிடப்பட்டிருந்த சிவசுப்பிரமணியன் சட்டைப்பையில் இருந்து ரூ.8 ஆயிரத்தையும் கொள்ளையர்கள் திருடி உள்ளதும் தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

இதுபற்றி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Next Story