வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் நடிகர் ரஜினிகாந்த்துக்கு அமைச்சர் வாழ்த்து


வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் நடிகர் ரஜினிகாந்த்துக்கு அமைச்சர் வாழ்த்து
x
தினத்தந்தி 3 Nov 2019 10:30 PM GMT (Updated: 4 Nov 2019 12:10 AM GMT)

வாழ்நாள் சாதனையாளர் விருதுபெறும் நடிகர் ரஜினிகாந்த்துக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாழ்த்து தெரிவித்து பேட்டி அளித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய அரசு நடிகர் ரஜினிகாந்த்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவது பொருத்தமான விருது, அவரது நடிப்புக்கு, அவரது பணிக்கு, அவரது யதார்த்தமான பேச்சுக்கு, அவர் தமிழக மக்களை நேசிப்பதற்காக கிடைத்துள்ள ஒரு உயரிய விருது. இதற்கு நடிகர் ரஜினிகாந்த்துக்கு எனது வாழ்த்துகள். இந்த விருதை மத்திய அரசு முன்கூட்டியே கொடுத்திருக்கலாம். மத்திய அரசு காலம் தாழ்த்தி இந்த விருது வழங்கி இருந்தாலும் பொருத்தமான நபருக்கு வழங்கிஉள்ளது. இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை.

தி.மு.க. உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை சந்திக்க போகிறது. 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.விற்கு அடி விழப்போகிறது என்பதின் தொடக்கம் தான் அ.தி.மு.க. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது. ஸ்டாலினுக்கு முதல்-அமைச்சர் ஆகும் யோகம் கிடையாது.

இடைத்தேர்தல், பொதுத்தேர்தல் என எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. தான் வெற்றிபெறும். நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம் தவறில்லை. நடிப்பவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும். திரைப்படத்தில் நடிப்பதுபோல் நிஜ வாழ்க்கையில் நடிக்கக்கூடாது. ஜெயலலிதா மறைவிற்குப் பின்பு நடிகர்கள் வாய்ப்பு கிடைக்கும் என்ற நோக்கத்தில் அரசியல் பேசுகிறார்கள். அ.தி.மு.க.வை நோக்கி அனைவரும் வந்து கொண்டிருக்கிறார்கள். தினகரன் கூடாரம் காலியாக உள்ளது. அ.தி. மு.க.விற்கும் -தி.மு.க.விற்கும் மட்டுமே தேர்தலில் போட்டி. சின்னம்மாவை டி.டி.வி. தினகரன் ஏமாற்றிக்கொண்டிருக் கிறார். நடக்கப்போவதை பின்பு பாருங்கள்.

இந்த விழாவில் அமைச்சரோடு ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா முத்தையா, சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் வங்கி தலைவர் முத்தையா மற்றும் மீரா, தனலட்சுமி, முருகன், நகர செயலாளர் ஸ்ரீபால சுப்பிரமணி, ஒன்றிய செயலாளர் மயில்சாமி உள்பட அ.தி. மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story