பருவம் தவறிய மழையால் பயிர்கள் நாசம்: நிவாரண நிதியாக ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும்; சிவசேனா வலியுறுத்தல்


பருவம் தவறிய மழையால் பயிர்கள் நாசம்: நிவாரண நிதியாக ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும்; சிவசேனா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 Nov 2019 12:22 AM GMT (Updated: 5 Nov 2019 12:22 AM GMT)

பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் நாசம் அடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதியாக ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் பருவம் தவறி பெய்த பலத்த மழையால் பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு காத்திருந்த பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. 325 தாலுகாக்களில் மொத்தம் 54.22 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் நாசம் அடைந்து இருக்கின்றன.

இதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.

அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மாநில அரசு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி உள்ளது. ஆனால் இந்த தொகை போதுமானது அல்ல என சிவசேனா தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'சாம்னா' தலையங்கத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஏற்கனவே நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவி வருகிறது. இதன் விளைவாக லட்சக்கணக்கானோருக்கு வேலை இழப்பு ஏற்பட்டு உள்ளது.

இத்தகைய சூழலில் பருவம் தவறிய மழையால் விவசாயத்தை நம்பியிருப்பவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

விவசாயிகளுக்கு உதவ அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும். என்ன விலை கொடுத்தாவது விவசாயிகள் காப்பாற்றப்பட வேண்டும்.

ஏற்கனவே ஒதுக்கப்பட்டு உள்ள ரூ.10 ஆயிரம் கோடி நிவாரணம் போதுமானது அல்ல. ரூ.25 ஆயிரம் கோடி முதல் ரூ.30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும்.

சேத மதிப்பீட்டை கணக்கிடும் தொழில்நுட்பத்தில் மாநில அரசு நேரத்தை வீணடிக்க கூடாது. இதில் விவசாயிகள் நேரடி பயனாளிகள் என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.

50 லட்சம் விவசாயிகள் பயிர்காப்பீடு செய்து உள்ளனர். பயிர்காப்பீட்டு தொகையை அனுமதிப்பதில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எந்த இடையூறும் ஏற்படுத்தக்கூடாது.

அவ்வாறு இல்லாமல் விவசாயிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தினால் பயிர்காப்பீட்டு நிறுவனங்கள் சிவசேனாவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story