சொத்துத்தகராறில், தாயை கொன்று உடலை எரித்த மகன், மருமகளுக்கு ஆயுள் தண்டனை - வேலூர் கோர்ட்டு தீர்ப்பு


சொத்துத்தகராறில், தாயை கொன்று உடலை எரித்த மகன், மருமகளுக்கு ஆயுள் தண்டனை - வேலூர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 5 Nov 2019 11:00 PM GMT (Updated: 5 Nov 2019 6:06 PM GMT)

வேலூர் அருகே சொத்துத்தகராறில் தாயை கொலை செய்து, உடலை எரித்த மகன், மருமகளுக்கு வேலூர் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

வேலூர்,

காட்பாடி தாலுகா பள்ளிக்குப்பம் கீழ்மோட்டூர் கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம். இவருடைய மனைவி ராணி (வயது 60). இவர்களுக்கு ஆறுமுகம் என்ற மகனும், ஆனந்தி, பொன்னியம்மாள் என்ற 2 மகள்களும் உள்ளனர். மகள்கள் 2 பேரும் போலீஸ்காரர்களாக வேலைபார்த்து வருகிறார்கள். வேலாயுதம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு விட்டார்.

அவருடைய பெயரில் 7 ஏக்கர் நிலம், 10 கடைகள், ஒரு அரிசிஆலை உள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.10 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சொத்துகள் அனைத்தையும் ஆறுமுகம் தனது பெயருக்கு எழுதித்தருமாறு தாய் ராணியிடம் கேட்டுவந்துள்ளார். ஆனால் அவர் எழுதிக்கொடுக்க மறுத்துவந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 25.7.2017 அன்று ராணி தனது நிலத்தில் மாடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது மகன் ஆறுமுகம் (32), அவருடைய மனைவி பிரியா (26) ஆகிய இருவரும் அங்கு சென்றனர். அப்போது ஆறுமுகம் நிலத்தை தனது பெயருக்கு எழுதித்தருமாறு கேட்டார். ஆனால் மகள்களுக்கும் சேர்த்து 3 பங்காக நிலத்தை பிரித்துத்தருவதாக ராணி கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம், தனது தாய் ராணியை கயிற்றால் அடித்துள்ளார். பின்னர் வீட்டுக்கு அழைத்துச்சென்று தலையணையால் முகத்தை அமுக்கி இருவரும் கொன்றனர். அடுத்தநாள் 26-ந் தேதி ராணியின் உடலை நிலத்துக்கு தூக்கிச்சென்று டீசல் ஊற்றி எரித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டனர். 27-ந் தேதி சென்று பார்த்தபோது உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்துள்ளது.

உடனே கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து மர இலைகள் மற்றும் மண்ணால் ராணியின் உடலை மூடிவிட்டு, எதுவும் தெரியாதது போன்று வீட்டுக்கு சென்றுவிட்டனர். தாய், வீட்டில் இல்லாததால் அவரை, மகள் ஆனந்தி தேடினார். ஆனால் ராணியை கண்டுபிடிக்க முடியவில்லை. அதைத்தொடர்ந்து இதுகுறித்து அவர் 2.8.2017 அன்று காட்பாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஆறுமுகமும், அவருடைய மனைவி பிரியாவும் சேர்ந்து ராணியை கொலைசெய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைதுசெய்தனர். இந்த வழக்குவிசாரணை வேலூர் கூடுதல் மாவட்ட விரைவு கோர்ட்டில் நடந்தது.

நீதிபதி குணசேகரன் வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில் ராணியை கொலைசெய்த குற்றத்திற்காக ஆறுமுகம், பிரியா ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், குற்றத்தை மறைத்ததற்கு தலா 7ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இருவருக்கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

Next Story