கம்பத்தில் பரிதாபம்: திருமணமான 5 நாளில் புதுப்பெண் தற்கொலை


கம்பத்தில் பரிதாபம்: திருமணமான 5 நாளில் புதுப்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 6 Nov 2019 11:00 PM GMT (Updated: 6 Nov 2019 5:56 PM GMT)

கம்பத்தில், திருமணமான 5 நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கம்பம்,

தேனி மாவட்டம் கம்பம் சுவாமி விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் ராஜா. அவருடைய மகன் சேதுபதி (வயது 22). விடுதி உரிமையாளர். கம்பம் குரங்குமாயன் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். அவருடைய மகள் சிவசக்தி (18). உறவினர்களான சேதுபதிக்கும், சிவசக்திக்கும் கடந்த 1-ந்தேதி திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பிறகு சேதுபதி தனது வீட்டு மாடியில் உள்ள அறையில் மனைவியுடன் குடியிருந்து வருகிறார். கீழ்தளத்தில் சேதுபதியின் பெற்றோர் வசிக்கின்றனர். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்து சேதுபதி வெளியே சென்றார். சிவசக்தி மட்டும் தனியாக இருந்தார்.

நீண்ட நேரமாகியும், மாடியில் இருந்து சிவசக்தி கீழே வராமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அவருடைய மாமியார் புஷ்பவள்ளி, மாடியில் உள்ள அறைக்கு சென்று பார்த்தார். அப்போது, மின் விசிறி பொருத்துவதற்காக அமைக் கப்பட்டிருந்த கொக்கியில் சுடிதார் துப்பட்டாவால் சிவசக்தி தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.

இதனை கண்ட புஷ்பவள்ளி கதறி அழுதார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், தூக்கில் தொங்கிய சிவசக்தியை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே சிவசக்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கீதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சிவசக்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இதேபோல் சிவசக்தியின் தற்கொலைக்கான காரணம் குறித்து உத்தமபாளையம் சப்-கலெக்டர் வைத்திநாதன் விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான 5 நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கம்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story