தூத்துக்குடி மாவட்டத்தில் 850 ஆழ்துளை கிணறுகள் மூடல் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


தூத்துக்குடி மாவட்டத்தில் 850 ஆழ்துளை கிணறுகள் மூடல் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 6 Nov 2019 10:15 PM GMT (Updated: 6 Nov 2019 7:34 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் 850 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டு உள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை, குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அரசு, தனியாருக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை கண்டறியும் பணி நடந்து வருகிறது. அதன்படி மாவட்டத்தில் இதுவரை பயன்பாட்டில் இல்லாமல் இருந்ததாக 850 ஆழ்துளை கிணறுகள் கண்டறியப்பட்டு உள்ளன. அந்த கிணறுகள் அரசு விதிமுறைகளின்படி மூடப்பட்டு உள்ளது.

இதே போன்று சரியான பாதுகாப்பு வசதிகள், சுற்றுச்சுவர் வசதி இல்லாமல் இருந்ததாக கண்டறியப்பட்ட 85 கிணறுகளில் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து, அதிகாரிகள் மூலம் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை கண்டறியும் பணி நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story