மழையால் வாழைப்பயிர் சேதம்: விவசாயி வி‌‌ஷம் குடித்து தற்கொலை


மழையால் வாழைப்பயிர் சேதம்: விவசாயி வி‌‌ஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 6 Nov 2019 10:30 PM GMT (Updated: 6 Nov 2019 7:34 PM GMT)

தூத்துக்குடி அருகே மழையால் வாழைப்பயிர் சேதம் அடைந்ததால் விவசாயி வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரம் பிரமையாபுரத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 57), விவசாயி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வயலை குத்தகைக்கு எடுத்து உள்ளார். அதில் சமீபத்தில் வாழைப்பயிரிட்டு உள்ளார். இதனால் சேகர் தினமும் வயலுக்கு சென்று வாழைப்பயிர்களை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான மகா புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 3 நாட்கள் தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழை காரணமாக குளங்கள், வயல்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. அப்போது, பிரமையாபுரத்தில் உள்ள சேகரின் வயலும் மழைநீரால் நிரம்பியது. மழைநீர் தொடர்ந்து வயலில் தேங்கி கிடந்ததால், வாழைப்பயிர்கள் அழுகி சேதம் அடைந்தன. இதனால் சேகர் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி மதியம் வயலுக்கு சென்ற சேகர், சேதம் அடைந்த வாழைப்பயிர்களை பார்த்து கண்ணீர் விட்டு உள்ளார். தொடர்ந்து வயலில் வைத்து வி‌‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் சேகரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் சேகர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேகரின் மகன் முத்துசெல்வம் அளித்த புகாரின் பேரில், சாயர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அருகே மழையால் வாழைப்பயிர் சேதம் அடைந்த வேதனையில் விவசாயி வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story