சிவகிரியில் வாகனம் மோதி தொழிலாளி சாவு


சிவகிரியில் வாகனம் மோதி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 6 Nov 2019 10:30 PM GMT (Updated: 6 Nov 2019 7:34 PM GMT)

சிவகிரி அருகே வாகனம் மோதி நண்பர் கண் எதிரிலேயே தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

சிவகிரி, 

நெல்லை மாவட்டம் சிவகிரி இல்லம்பிள்ளை தெற்கு தெருவை சேர்ந்தவர் ரமே‌‌ஷ் (வயது 23). இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் தங்கியிருந்து தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் அவர் தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று ரமேசும், இவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த டானியல் செல்வராஜூம் தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர்.

சிவகிரியில் உள்ள 2-ம் உலகப்போர் நினைவு சின்னம் அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் வந்த வாகனம் ஒன்று ரமே‌‌ஷ் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து போனார். அவரது உடலை பார்த்து டானியல் செல்வராஜ் கதறி அழுதார்.

இதுகுறித்து தகவலறிந்த சிவகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ரமேசின் உடலை மீட்டு, பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர் கண் எதிரிலேயே விபத்தில் தொழிலாளி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story