தென்பெண்ணையாறு, வாணியாற்றின் குறுக்கே ரூ.15 கோடியில் 2 உயர்மட்ட பாலங்கள்


தென்பெண்ணையாறு, வாணியாற்றின் குறுக்கே ரூ.15 கோடியில் 2 உயர்மட்ட பாலங்கள்
x
தினத்தந்தி 6 Nov 2019 11:00 PM GMT (Updated: 6 Nov 2019 8:30 PM GMT)

தென்பெண்ணையாறு, வாணியாறு ஆகியவற்றின் குறுக்கே ரூ.15½ கோடியில் 2 உயர்மட்ட பாலங்கள் கட்டும் பணியை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராமசாலைகள் கோட்டம் சார்பில் நவலை முதல் பெரமாண்டபட்டி சாலை வரை தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.11.60 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி தொடக்கவிழா நடைபெற்றது. இதேபோல் அனுமந்தீர்த்தம்-பொய்யப்பட்டி சாலையில் வாணியாற்றின் குறுக்கே ரூ.4.07 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டும் பணியின் தொடக்க விழா நடைபெற்றது.

இந்த விழாக்களுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சம்பத்குமார், கோவிந்தசாமி, அரூர் உதவி கலெக்டர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாக்களில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு ரூ.15.67 கோடி மதிப்பிலான 2 உயர்மட்ட பாலங்கள் கட்டும் பணியை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

50 கிராமமக்கள்

இந்த விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், நவலை-பெரமாண்டப்பட்டி சாலையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே 166.40 மீட்டர் நீளம் கொண்ட உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த உயர்மட்ட பாலம் 7.5 மீட்டர் முதல் 8.10 மீட்டர் வரை ஓடுதள அகலம் மற்றும் நடைபாதைகள் கொண்டதாக அமைக்கப்படுகிறது. இதேபோல் அனுமந்தீர்த்தம்-பொய்யப்பட்டி சாலையில் வாணியாற்றின் குறுக்கே கட்டப்படும் உயர்மட்ட பாலம் 68 மீட்டர் நீளம் கொண்டதாகும். இந்த பாலம் 7.5 மீட்டர் ஓடுதள அகலம் கொண்டதாக அமைக்கப்படுகிறது. இந்த 2 உயர்மட்ட பாலங்களின் கட்டுமான பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் 50-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பயன்பெறுவார்கள் என்று பேசினார்.

இந்த விழாவில் நபார்டு மற்றும் கிராமசாலைகள் திட்ட கோட்ட பொறியாளர் செல்வநம்பி, உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ்குமார், அரசு வக்கீல் பசுபதி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் பொன்னுவேல், சிவப்பிரகாசம், கூட்டுறவு சங்க தலைவர் மதிவாணன், உதவி பொறியாளர்கள் நரசிம்மன், கல்பனா, தாசில்தார்கள் கலைச்செல்வி, செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் விமலன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ஐ.கே.முருகன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story