நாமக்கல், சேலம் பகுதிகளில் பெண்களிடம் நகைபறித்த 2 பேர் கைது


நாமக்கல், சேலம் பகுதிகளில் பெண்களிடம் நகைபறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 6 Nov 2019 11:00 PM GMT (Updated: 6 Nov 2019 8:48 PM GMT)

நாமக்கல், சேலம் பகுதி களில் பெண்களிடம் நகைபறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மேட்டுத்தெருவில் வசித்து வருபவர் சக்கரவர்த்தி. இவரது மனைவி சங்கீதா. இவரிடம் கடந்த ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி 6 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் பறித்து சென்றனர்.

இதேபோல் ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி அய்யம்பாளையம் பகுதியில் போதுப்பட்டியை சேர்ந்த மனோகரன் மனைவி ரமீலாவிடம் 7 பவுன் நகையையும், நெம்பர்-3 கொமாரபாளையத்தை சேர்ந்த ஜீவானந்தம் என்பவரின் மனைவி ரேணுகாவிடம் இருந்து செப்டம்பர் மாதம் 9-ந் தேதி 3½ பவுன் நகையையும், நாமக்கல் அருகே உள்ள எர்ணாபுரத்தை சேர்ந்த ரவி மனைவி கலைச்செல்வியிடம் செப்டம்பர் மாதம் 28-ந் தேதி 6 பவுன் நகையையும் மர்ம ஆசாமிகள் பறித்து சென்றனர்.

இது தொடர்பாக ராசிபுரம், நல்லிபாளையம், வெண்ணந்தூர் மற்றும் வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைபறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர்.

2 பேர் கைது

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செல்லமுத்து, கைலாசம், விஜயகுமார் மற்றும் தங்கவேல் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை 7 மணியளவில் ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து தலைமையிலான தனிப்படை போலீசார் அணைப்பாளையம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்களில் ஒருவர் சேலம் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த அருணாச்சலம் (வயது 20) என்பதும், மற்றொருவர் பிரபு என்ற போண்டா பிரபு (21) என்பதும் தெரியவந்தது.

இவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், வெண்ணந்தூர், நல்லிபாளையம் மற்றும் வேலகவுண்டம்பட்டி பகுதிகளிலும், சேலம் மாவட்டம் ஓமலூர், தீவட்டிப்பட்டி பகுதிகளிலும் பெண்களிடம் நகைபறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் திருட்டு போன 27½ பவுன் நகைகளை மீட்டனர். மேலும் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பாராட்டு

இந்த வழக்குகளில் துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்களை கைது செய்து, திருட்டு போன நகைகளை மீட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு பாராட்டினார்.


Next Story