தஞ்சை அருகே, அவமதிப்பு செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலையை சுற்றிலும் இரும்பு கூண்டு அமைக்கும் பணி


தஞ்சை அருகே, அவமதிப்பு செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலையை சுற்றிலும் இரும்பு கூண்டு அமைக்கும் பணி
x
தினத்தந்தி 7 Nov 2019 11:00 PM GMT (Updated: 7 Nov 2019 5:38 PM GMT)

தஞ்சை அருகே, அவமதிப்பு செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலையை சுற்றிலும் இரும்பு கூண்டு அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. அந்த வீதியில் மக்கள் செல்ல போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டியில் தென்னிந்திய வள்ளுவர் குல சங்கம், திருவள்ளுவர் தெருவாசிகள் சார்பில் கடந்த 2005-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த திருவள்ளுவர் சிலையை மர்ம நபர்கள் அவமதித்தனர். திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை கைது செய்யக்கோரி பல்வேறு அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பல்வேறு அமைப்பினர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர். திருவள்ளுவர் சிலைக்கு கடந்த 5-ந் தேதி பா.ஜ.க.வினர் பாலாபிஷேகமும், நேற்றுமுன்தினம் இந்து மக்கள் கட்சியினர் ருத்ராட்ச மாலை, காவி துண்டு அணிவித்தனர். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். வேறு எந்த அமைப்புகளை சேர்ந்தவர்களும் திருவள்ளுவர் சிலைக்கு ஏதாவது அணிவித்துவிடக்கூடாது என்பதற்காக திருவள்ளுவர் சிலை இருக்கும் வீதியில் மக்கள் செல்வதற்கு கூட போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். பத்திரிகையாளர்கள் செல்லவும் போலீசார் தடை விதித்தனர்.

இரும்பு கூண்டு

திருவள்ளுவர் சிலை அருகே யாரும் செல்ல முடியாத அளவுக்கு அங்கு போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்துள்ளனர். கடைவீதியிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளுவர் சிலையை சுற்றிலும் இரும்பு கம்பிகள் அமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. அதன்படி தஞ்சை தாசில்தார் வெங்கடேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் சிலர், திருவள்ளுவர் சிலை இருக்கும் இடத்தை நேற்றுகாலை பார்வையிட்டனர். பின்னர் அங்கு நிரந்தரமான தடுப்புகளை ஏற்படுத்தவும் சிலையை பாதுகாப்பாக இரும்பு கூண்டுக்குள் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.

சிலையை சுற்றிலும் குழி தோண்டப்பட்டு, கட்டிட பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து தாசில்தார் வெங்கடேஸ்வரன் கூறும்போது, திருவள்ளுவர் சிலை மீது இனி வருங்காலத்தில் யாரும் அவமதிப்பு செய்து விடக்கூடாது என்பதற்காக மேற்கூரையும், சிலையை சுற்றி இரும்பு கம்பிகளும் அமைக்கப்பட உள்ளது. இந்த பணி முடிந்தவுடன் பூட்டு போட்டு பூட்டி வைக்கப்படும். அந்த சாவி சிலையை வைத்த அமைப்பினரிடம் ஒப்படைக்கப்படும். ஏதேனும் நிகழ்ச்சி என்றால் சிலைக்கு மாலை அணிவிக்க திறந்துவிடப்படும். மற்ற நாட்களில் சிலை பாதுகாப்பாக பூட்டி வைக்கப்படும் என்றார்.

Next Story