திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர் உடல்தகுதி தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வாலிபர் கைது


திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர் உடல்தகுதி தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 7 Nov 2019 11:15 PM GMT (Updated: 7 Nov 2019 7:58 PM GMT)

திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடந்த காவலர் உடல் தகுதி தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கே.கே.நகர்,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத்தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 25-ந் தேதி நடந்தது. இதில் தேர்வானவர்களுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உடல்தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கான உடல்தகுதி தேர்வு திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

2,473 ஆண்கள், 1,251 பெண்கள் என மொத்தம் 3,724 பேர் உடல்தகுதி தேர்வுக்கு தகுதி பெற்று இருந்தனர். முதல்நாளான நேற்று முன்தினம் நடந்த உடல்தகுதி தேர்வுக்கு 718 பேர் வந்திருந்தனர். அதில் 530 பேர் தேர்ச்சி பெற்றனர். 2-வது நாளாக நேற்றும் தேர்வு நடந்தது. இதில் 800 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. தேர்வுக்கு வந்தவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, உயரம் மற்றும் மார்பளவு அளக்கப்பட்டது. அதன்பிறகு 1,500 மீட்டர் ஓட்டம் நடத்தப்பட்டது. தேர்வை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், பெரம்பலூர் போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் ஆகியோர் பார்வையிட்டனர். 2-ம் நாளான நேற்று 683 பேர் தேர்வுக்கு வந்து இருந்தனர். இதில் 533 பேர் தேர்ச்சி பெற்றனர்.

ஆள்மாறாட்டம் செய்தவர் கைது

இந்தநிலையில் நேற்று நடந்த தேர்வின்போது, பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா வேள்விமங்கலத்தை சேர்ந்த சிந்தனைவளவன் (வயது 23) என்ற வாலிபருடைய தேர்வுக்கான அனுமதிச்சீட்டை போலீசார் சரிபார்த்தனர். அப்போது அவர் எழுத்துத்தேர்வில் தோல்வி அடைந்து இருந்தது தெரியவந்தது. ஆனால் எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றொரு வாலிபரின் தேர்வு அனுமதிச்சீட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதில் தனது போட்டோவை ஒட்டி தேர்வுக்கு வந்து ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து சிந்தனைவளவனை பிடித்து கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நாளை (சனிக்கிழமை) மற்றும் 11-ந் தேதி பெண்களுக்கு உடல்தகுதி தேர்வு நடக்கிறது. உடல்தகுதி தேர்வில் தேர்ச்சி பெறும் ஆண் மற்றும் பெண்களுக்கு வருகிற 12, 13, 14-ந் தேதிகளில் அடுத்த கட்டமாக உடல் திறன் தேர்வு நடைபெறும். 

Next Story