சென்னிமலையில் திருவள்ளுவர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு


சென்னிமலையில் திருவள்ளுவர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 7 Nov 2019 10:45 PM GMT (Updated: 7 Nov 2019 9:52 PM GMT)

சென்னிமலையில் திருவள்ளுவர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னிமலை,

தஞ்சை பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று முன்தினம் அங்கு சென்று சிலைக்கு ருத்ராட்சம், மாலை அணிவித்தார். மேலும் காவி துண்டையும் அணிவித்தார். இதைத்தொடர்ந்து அவர் கைதாகி விடுதலை செய்யப்பட்டார்.

இதேபோல் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையும் நேற்று அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள திருவள்ளுவர் சிலைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

சென்னிமலை

சென்னிமலை புதிய பஸ் நிலையம் அருகே திருவள்ளுவர் மக்கள் நற்பணி மன்றம் சார்பில் கடந்த 1997-ம் ஆண்டு திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலைக்கு பா.ஜ.க.வினர் காவி துண்டு அணிவிக்க வருவதாக சென்னிமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து அந்த சிலை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிலை முன்பு விடிய விடிய போலீஸ்காரர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் சென்னிமலை பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Next Story