சிங்கப்பூர் தொழில் அதிபர்களுடன் நாராயணசாமி சந்திப்பு: புதுவை விமான நிலையம் விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனை


சிங்கப்பூர் தொழில் அதிபர்களுடன் நாராயணசாமி சந்திப்பு: புதுவை விமான நிலையம் விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனை
x
தினத்தந்தி 7 Nov 2019 11:51 PM GMT (Updated: 7 Nov 2019 11:51 PM GMT)

புதுவை விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக சிங்கப்பூர் தொழில் அதிபர்களை முதல்-அமைச்சர் நாராயணசாமி சந்தித்து பேசினார்.

சிங்கப்பூர்,

புதுவையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் தொழில் வளம், வேலைவாய்ப்பினை பெருக்க புதிய தொழிற்கொள்கை அறிவிக்கப்பட்டது. அதன்படி தொழில் தொடங்க முன்வருவோருக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட் டன. தொழில் முதலீட்டாளர்கள் மாநாடும் நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு நாடுகள், மாநிலங்களில் இருந்து கலந்து கொண்ட தொழில் அதிபர்கள் தொழில் தொடங்க ஆர்வம் காட்டினர். சுற்றுச்சூழலை பாதிக்காத, ரசாயனம் அல்லாத தொழிற்சாலைகள் தொடங்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர் ஷாஜகான், பிப்டிக் தலைவர் சிவா எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் குழுவினர் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளனர். அவர்களுக்கு இந்திய அதிகாரிகள் மற்றும் சிங்கப்பூர் தொழில் அதிபர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிங்கப்பூர்- இந்திய தொழில் வர்த்தக சபையின் சார்பில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் அவர்கள் கலந்துகொள்கின்றனர். முன்னதாக நேற்று காலை புதுவை விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக மெயின்ஹெர்ட் உள்கட்டமைப்பு கட்டுமான நிறுவனத்தின் குழும இயக்குனர் ஜனோஸ் பரன்யா மற்றும் அவரது குழுவினரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

சுற்றுலா, உள்கட்டமைப்பு மேம்பாடு, மாசில்லா தொழிற்சாலைகள், கடற்கரை மேம்பாடு என பல்வேறு தொழில்களில் சிங்கப்பூர் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்காக முக்கிய தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

Next Story