அரியலூர், வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தொழிற் கடன் பெற விண்ணப்பிக்கலாம்


அரியலூர், வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தொழிற் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 8 Nov 2019 10:30 PM GMT (Updated: 8 Nov 2019 12:55 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்கும் பொருட்டு வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

அரியலூர், 

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், துறை திட்ட மதிப்பீடாக ரூ.10 லட்சம் வரையிலான உற்பத்தி, ரூ.3 லட்சம் வரையிலான சேவை மற்றும் ரூ.1 லட்சம் வரையிலான வியாபாரம் சார்ந்த தொழில் நிறுவனங்கள் தொடங்க 25 சதவீதம் மானியம் அல்லது அதிக பட்சமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மானியத்துடன் வங்கி கடன் பெறும் பொருட்டு படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் என்ற தமிழக அரசின் திட்டம் ஏற்கனவே மாவட்ட தொழில் மையம் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற குறைந்த பட்சம் 8–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பொது பிரிவினருக்கு வயது வரம்பு 18 முதல் 35 வயது வரையும், சிறப்பு பிரிவினருக்கு 18 முதல் 45 வயது வரையும் இருத்தல் வேண்டும். தற்போது தமிழக அரசின் அரசாணை எண் 69–ன் படி சிறு– குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை 2019–ன் படி வியாபாரம் மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு திட்ட மதிப்பீடு உச்ச வரம்பு முறையே ரூ.1 லட்சம் மற்றும் ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வங்கிக்கடன் பெறும் பயனாளிகளுக்கு திட்ட மதிப்பில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை தமிழக அரசின் மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் பங்கு தொகையாக திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் பொது பிரிவினரும், 5 சதவீதம் சிறப்பு பிரிவினரும் வங்கிக்கு செலுத்த வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்திற்கு 2019–20–ம் ஆண்டு இலக்கீடாக 75 நபர்கள் ரூ.45 லட்சம் என நிர்ணயித்து வழங்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க தகுதியுடைய, ஆர்வமுடைய படித்த வேலை வாய்ப்பற்ற தொழில் முனைவோர் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்யப்பட்ட இரண்டு விண்ணப்ப நகல்களுடன் குடும்ப அட்டை, கல்வி சான்று, சாதிச்சான்று, விலைப்புள்ளி, திட்ட அறிக்கை மற்றும் உறுதி மொழி பத்திரம் ஆகியவற்றின் நகல்களுடன் மாவட்ட தொழில் மையம், அரியலூர் என்ற முகவரியில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன் பெறலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story