பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 8 Nov 2019 11:00 PM GMT (Updated: 8 Nov 2019 8:20 PM GMT)

முத்துப்பேட்டையில் பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

முத்துப்பேட்டை, 

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த 16 வயதான மாணவி, மன்னார்குடியில் விடுதியில் தங்கி தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தீபாவளி விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த மாணவியை விடுமுறை முடிந்து கடந்த 3-ந் தேதி பள்ளிக்கு செல்ல பெற்றோர் முத்துப்பேட்டையில் இருந்து பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இரவு 8 மணிக்கு பிறகும் மாணவி வராததால் பள்ளி நிர்வாகத்தினர் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து பெற்றோர், அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் முத்துப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர். புகாரில் தனது மகளை, முத்துப்பேட்டை கோவிலான் தோப்பு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் அரவிந்த் (வயது21) என்பவர் கடத்தி சென்று இருக்கலாம் என தெரிவித்திருந்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்பாபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடிவந்தனர்.

இதற்கிடையில் அரவிந்த், தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அங்கு சென்ற முத்துப்பேட்டை போலீசார், மாணவியையும், அரவிந்தையும் அங்கிருந்து மீட்டு வந்தனர். பின்னர் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தன்னை, அரவிந்த் வலுக்கட்டாயமாக கடத்தி சென்று தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார். இதனையடுத்து போலீசார், அரவிந்தை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். மாணவியை, போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story