ஓட்டப்பிடாரம் அருகே, மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த 2 பேர் சாவு


ஓட்டப்பிடாரம் அருகே, மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த 2 பேர் சாவு
x
தினத்தந்தி 8 Nov 2019 10:30 PM GMT (Updated: 8 Nov 2019 9:20 PM GMT)

ஓட்டப்பிடாரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாய மடைந்த 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

ஓட்டப்பிடாரம்,

ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை ராஜூவ் காலனியை சேர்ந்தவர் காளிலிங்கம் (வயது 37). இவருடைய நண்பர் அதே ஊரை சேர்ந்த சாமிநாதன் (32). இவர்கள் 2 பேரும் கொத்தனார். இவர்கள் நேற்று முன்தினம் மதியம் எப்போதும் வென்றான் அருகே உள்ள தளவாய்புரத்தில் கட்டிட பணிக்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். மீனாட்சிபுரம் விலக்கு பாலம் அருகே உள்ள சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் விழுந்தது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து பசுவந்தனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, 2 பேரையும் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சாமிநாதன், காளிலிங்கம் ஆகிய இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து பசுவந்தனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான காளிலிங்கத்துக்கு தேவி பூமாரியம்மாள் (34) என்ற மனைவியும், முனீசுவரி, கீர்த்திகா என்ற 2 மகள்களும் உள்ளனர். சாமிநாதனுக்கு ஆனந்தவள்ளி என்ற மனைவியும், சந்தனமாரியம்மாள், செல்வலட்சுமி என்ற 2 மகள்களும் உள்ளனர். விபத்தில் ஒரே பகுதியை சேர்ந்த 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story