திருவள்ளூரில் குழந்தைகள் பாதுகாத்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்


திருவள்ளூரில் குழந்தைகள் பாதுகாத்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
x
தினத்தந்தி 8 Nov 2019 10:15 PM GMT (Updated: 8 Nov 2019 9:46 PM GMT)

திருவள்ளூரில் குழந்தைகள் பாதுகாத்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.

திருவள்ளூர், 

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூக பாதுகாப்புத்துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த கூட்டத்தில் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தலை தவிர்த்தல் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் கிராம அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டத்தை வலுப்படுத்துவதை முக்கிய நோக்கமாகவும் இதனை மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாதந்தோறும் அவரவர் பஞ்சாயத்திற்குட்பட்ட கிராமங்களில் தொடர்ந்து நடத்திடவும் அறிவுறுத்தப்பட்டது.

கூட்டம் தொடர்ந்து நடப்பதால் குழந்தைகள் சார்ந்த பிரச்சினைகளை எளிதில் அடையாளம் காணவும் அதனை தீர்க்க ஏதுவாக அமையும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் திருமணம் ஆகாத நிலையில் அல்லது 18 வயதிற்கு கீழ் கருத்தரித்துள்ள சிறுமிகளின் விவரங்கள் குறித்து மருத்துவத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்களுக்கு தகவல் அளிக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவு பெறாத குழந்தை இல்லங்கள் ஏதேனும் உள்ளனவா என்றும் பதிவு பெற்ற இல்லங்கள் உள்கட்டமைப்பு வசதிகளுடன் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்கின்றனவா என கண்காணிக்க அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலருக்கு இந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

இதில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், மூத்த உரிமையியல் நீதிபதி சரஸ்வதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செந்தில், மாவட்ட சமூக நல அலுவலர் மீனா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கலைச்செல்வி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் ராதிகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story