சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் வேறு ஓட்டலுக்கு மாற்றம்; போலீஸ் பாதுகாப்பு அளிக்க கோரிக்கை


சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் வேறு ஓட்டலுக்கு மாற்றம்; போலீஸ் பாதுகாப்பு அளிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 9 Nov 2019 12:25 AM GMT (Updated: 9 Nov 2019 12:25 AM GMT)

ரங்கசாரதா ஓட்டலில் இருந்து சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மலாடில் உள்ள வேறு ஓட்டலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மும்பை, 

மராட்டியத்தில் ஆட்சி அமைப்பதில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், பாரதீய ஜனதா கட்சி சிவசேனா மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை இழுப்பதற்கு குதிரை பேரத்தில் ஈடுப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதை தொடர்ந்து சிவசேனா தனது எம்.எல்.ஏ.க்களை அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேயின் மாதோஸ்ரீ இல்லத்தின் அருகில் உள்ள ரங்கசாரதா என்ற ஓட்டலில் தங்க வைத்தது.

இந்தநிலையில், அந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மலாடில் உள்ள ஒரு ஓட்டலில் வருகிற 15-ந் தேதி வரை தங்க வைப்பதற்கு சிவசேனா முடிவு செய்து உள்ளது. அதன்படி நேற்று அவர்கள் மலாடு ஓட்டலுக்கு மாற்றப்பட்டனர்.

அங்கு தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சிவசேனா செயலாளர் மிலிந்த் நர்வேகர் மும்பை போலீஸ் கமிஷனரிடம் கடிதம் கொடுத்து உள்ளார். இந்த நிலையில் ஓட்டலில் தங்கும் சிவசேனா எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று மும்பை போலீஸ் தெரிவித்து உள்ளது.

Next Story