முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் என்னை பொய்யராக சித்தரிக்க பட்னாவிஸ் முயற்சிக்கிறார்; உத்தவ் தாக்கரே தாக்கு


முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் என்னை பொய்யராக சித்தரிக்க பட்னாவிஸ் முயற்சிக்கிறார்; உத்தவ் தாக்கரே தாக்கு
x
தினத்தந்தி 9 Nov 2019 12:28 AM GMT (Updated: 9 Nov 2019 12:28 AM GMT)

முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் தேவேந்திர பட்னாவிஸ் என்னை பொய்யர் என சித்தரிக்க முயற்சிக்கிறார் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டினார்.

மும்பை, 

மராட்டியத்தில் பாரதீய ஜனதா தலைமையில் ஆட்சி அமைக்க சிவசேனா உடன்படாததை அடுத்து நேற்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து பேட்டி அளித்த பட்னாவிஸ், முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வது தொடர்பாக எனது முன்னிலையில் இரண்டு கட்சிகளுக்கும் இடையே எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கூறியிருந்தார்.

இந்தநிலையில், முதல்-மந்திரி ராஜினாமாவை தொடர்ந்து சிறிது நேரத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேட்டி அளித்தார். அப்போது, முதல்-மந்திரி பதவியை பங்கிட்டு கொள்வது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறியதற்கு பட்னாவிசுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மராட்டியத்தில் சிவசேனாவை சேர்ந்தவர் முதல்-மந்திரி ஆவார் என்று எனது தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றுவேன்.

இதற்கு தேவேந்திர பட்னாவிசோ அல்லது அமித்ஷாவோ எங்களுக்கு தேவையில்லை.

என்னை ஒரு பொய்யர் என சித்தரிப்பதற்கு பா.ஜனதா முயற்சி செய்வது எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. என்னை ஒரு பொய்யர் என்று அழைப்பவர்களுடன் நான் பேசமாட்டேன். இதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். என்னை ஒரு பொய்யர் என சித்தரிக்க காபந்து முதல்-மந்திரி (பட்னாவிஸ்) முயற்சிக்கக்கூடாது. நான் என் வாழ்க்கையில் ஒருபோதும் பொய் பேசியதில்லை.

முதல்-மந்திரி பதவியை பங்கிட்டு கொள்வது தொடர்பாக இரண்டு கட்சிகளுக்கு இடையேயும் உடன்பாடு இருந்தது. இது தொடர்பாக அமித்ஷா முன்னிலையில் தான் உறுதி அளிக்கப்பட்டது.

ஆனால் முதல்-மந்திரி பதவியைப் பகிர்வது குறித்து ஒருபோதும் முடிவு செய்யப்படவில்லை என்று பட்னாவிஸ் கூறிய நாளில் இருந்து நான் புதிய அரசு அமைப்பதற்காக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை நிறுத்தினேன்.

அமித்ஷாவும், அவர்களை சேர்ந்தவர்களும் தான் பொய் பேசுகிறார்கள்.

பொய் பேசுவது தான் உங்கள் இந்துத்வாவின் ஒரு பகுதியா என்று ஆர்.எஸ்.எஸ்.சிடம் கேட்க விரும்புகிறேன். பாரதீய ஜனதாவை எதிரியாக கருதவில்லை. தேவேந்திர பட்னாவிஸ் கூறியது போல நான் பிரதமர் மோடியை தாக்கி பேசவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கொள்கைகளை தான் விமர்சித்து இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story