தஞ்சை பெரியகோவிலில் நந்திசிலை கண்ணாடி பெட்டி உடைப்பு


தஞ்சை பெரியகோவிலில் நந்திசிலை கண்ணாடி பெட்டி உடைப்பு
x
தினத்தந்தி 9 Nov 2019 11:00 PM GMT (Updated: 9 Nov 2019 7:14 PM GMT)

தஞ்சை பெரிய கோவிலில் நந்திசிலை கண்ணாடி பெட்டி உடைக்கப்பட்டது.

தஞ்சாவூர்,

மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரியகோவில் ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இந்த கோவிலில் பெரிய நந்தி சிலை உள்ளது. பெருவுடையார் சன்னதியில் சிறிய நந்தி சிலை உள்ளது. இந்த சிலை கண்ணாடி பெட்டியால் மூடப்பட்டுள்ளது. சிலையை பக்தர்கள் பார்க்கலாம். ஆனால் தொட முடியாத வகையில் இந்த பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெரிய கோவிலுக்கு வந்த வாலிபர் ஒருவர், திடீரென நந்தி சிலை வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பெட்டியை கையால் அடித்தார். அதில் பெட்டியின் ஒரு பகுதி உடைந்தது.

வாலிபரிடம் விசாரணை

இதை பார்த்த கோவில் குருக்கள் விரைந்து வந்து வாலிபரிடம் எதற்காக கண்ணாடி பெட்டியை உடைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் விடாமல் உடைத்து கொண்டிருந்ததால் ஐம்பொன்னால் ஆன ராஜ ராஜசோழன் சிலைக்கு பாதுகாப்பு அளித்து கொண்டிருந்த போலீசாரிடம் குருக்கள் தெரிவித்தனர். உடனே அவர்கள் வந்து வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் எந்த பதிலும் கூறாமல் மவுனமாக இருந்தார். இதையடுத்து தஞ்சை மேற்கு போலீசாரிடம் அந்த வாலிபர் ஒப்படைக்கப்பட்டார்.

போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து மனநல மருத்துவ மனையில் சிகிச்சைக்காக போலீசார் சேர்த்தனர்.

Next Story