அயோத்தி வழக்கில் தீர்ப்பு: பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


அயோத்தி வழக்கில் தீர்ப்பு: பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 9 Nov 2019 11:00 PM GMT (Updated: 9 Nov 2019 7:32 PM GMT)

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாவதற்கும் முன்பும், வெளியான பிறகும் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பெரம்பலூர்,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமி, பாபர் மசூதி அமைந்திருந்ததாக கூறப்பட்ட சர்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தனது தீர்ப்பை நேற்று வழங்கியது. அதில் அயோத்தியில் சர்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கியும், பாபர் மசூதி இருந்த இடத்திற்கு உரிமை கோரிய சன்னி வக்பு வாரியத்திற்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அயோத்தி வழக்கில் தீர்ப்பு நேற்று வெளியானதை முன்னிட்டு முன்னதாக அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நாடு முழுவதும் மத்திய- மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து பாதுகாப்பு பணியில் போலீசாரை ஈடுபடுத்தினர்.

போலீஸ் பாதுகாப்பு

இதையடுத்து பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நேற்று காலை தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு பெரம்பலூர் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், அரசு போக்குவரத்துக்கழக பணிமனை, மாவட்டத்தில் உள்ள கோவில்கள், பள்ளி வாசல்கள், மசூதிகள், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், தலைவர்களின் சிலைகள் முன்பு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். மேலும் போலீசார் வாகனம், இரு சக்கர வாகனங்கள் மூலம் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். இந்துக்கள், முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசாரின் பாதுகாப்பு பணியை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் போலீசார், ஊர்காவல் படை வீரர்கள் என 400 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதே போல் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியான பிறகும் பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அப்போது விரும்ப தகாத சம்பவங்கள் ஏதும் நடைபெறுகிறதா? என்று போலீசார் கண்காணித்தனர். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியா வதற்கு முன்பும், வெளியான பின்பும் அமைதி நிலவியது.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் உள்ள முக்கியமான இடங்கள், கோவில்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் முன்பு நேற்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story