கரூர் காமராஜர் மார்க்கெட் பகுதியில் ரெட்டை வாய்க்கால் பாலப்பணி முடிவடைவது எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


கரூர் காமராஜர் மார்க்கெட் பகுதியில் ரெட்டை வாய்க்கால் பாலப்பணி முடிவடைவது எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 9 Nov 2019 10:30 PM GMT (Updated: 9 Nov 2019 7:45 PM GMT)

கரூர் காமராஜர் மார்க்கெட் பகுதியில் ரெட்டை வாய்க்கால் பாலப்பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்,

கொங்கு மண்டலத்துக்கு உட்பட்ட கரூர் நகரில் விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்கும் முக்கிய நீர் ஆதாரமாக அமராவதி ஆறு உள்ளது. இந்த ஆறானது திருப்பூரில் இருந்து கரூர் நகருக்குள் பாய்ந்து திருமுக்கூடலூர் காவிரியாற்றில் கலக்கிறது. மேலும் கரூர் நகர்புறத்தில் ஏரி, குளம் உள்ளிட்டவை பரவலாக இல்லாததால், வாய்க்கால் பாசனம் மூலம் மற்றும் கிணற்று பாசனம் மூலமே பெருவாரியான விவசாய பணிகள் நடக்கின்றன. இதில் பிரதானமாக கரூர் அமராவதியின் கிளை வாய்க்கால்களான ரெட்டை வாய்க்கால் விளங்குகிறது.

இந்த வாய்க்காலானது அமராவதி ஆற்றில் ஆண்டாங்கோவில் பகுதியில் தொடங்கி சின்ன ஆண்டாங்கோவில் பிரிவு, காமராஜர் மார்க்கெட், நீலிமேடு, வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று மீண்டும் ஆற்றினுள்ளே சென்று முடிவடையும் வகையில் நீர்வழிப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் கரூர் ரெயில் நிலையம் மற்றும் பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கரூரிலிருந்து செல்பவர்கள் ரெட்டை வாய்க்காலை கடந்து செல்லும் விதமாக கரூர் காமராஜர்மார்க்கெட் பகுதியில் கருங்கற்களால் ஆன பாலம் கட்டப்பட்டது.

இறுதிகட்டம்

வாய்க்காலில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடிய போதும் கூட, இந்த பாலம் போக்குவரத்திற்கு பிரதானமாக இருந்தது. நாளடைவில் காமராஜர் மார்க்கெட்டை சுற்றிலும் குடியிருப்புகள், வணிகநிறுவனங்கள் அதிகம் வந்ததன் காரணமாக தரைமட்டம் உயர்த்தப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த கல் பாலம் கட்டி நீண்ட நாட்கள் ஆனதைதொடர்ந்து சேதமடைந்தது. பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் பேரில், கரூர் உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் காமராஜர் மார்க்கெட் பகுதியில் புதிதாக பாலம் கட்டுவதற்கு ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஆகஸ்டு மாதம் முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

6 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்துடன் தடுப்புசுவருடன் கூடிய புதிய பாலமானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எனினும் பாலத்தையொட்டிய சாலையினை சீர் செய்வது, பாலத்தின் பூச்சு பணிகள் உள்ளிட்டவை இன்னும் முடிவடையாமல் உள்ளதால், அந்த வழியாக போக்குவரத்தினை மேற்கொள்ள முடிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே பாலப்பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story