அயோத்தி வழக்கில் தீர்ப்பு: குமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு


அயோத்தி வழக்கில் தீர்ப்பு: குமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு
x
தினத்தந்தி 9 Nov 2019 11:00 PM GMT (Updated: 9 Nov 2019 7:58 PM GMT)

அயோத்தி வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டதை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கோவில்கள், பள்ளிவாசல்கள், பா.ஜனதா கட்சி அலுவலகம் மற்றும் இந்து இயக்கங்களின் அலுவலகங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

நாகர்கோவில்,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு? என்பது தொடர்பான வழக்கில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த தீர்ப்பு நேற்று வெளியாக இருந்ததையொட்டி, அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க மத்திய அரசு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

உஷார்படுத்தப்பட்ட போலீசார்

தீர்ப்பு தொடர்பாக எதிர்ப்பு மற்றும் ஆதரவு கருத்துக்களையும், ஆதாரப்பூர்வமற்ற தகவல்களையும் சமூக ஊடகங்கள் மூலமாக யாரும் பரப்பக்கூடாது என்றும், இதுதொடர்பாக சமூக ஊடகங்கள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சைபர் கிரைம் போலீசார் அறிவித்து இருந்தனர்.

மேலும் அதிகாலையில் இருந்தே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் நாகர்கோவில், கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல் ஆகிய 4 சப்-டிவிஷன்களுக்கு உட்பட்ட போலீஸ் அதிகாரிகளும், போலீசாரும் உஷார்படுத்தப்பட்டு, தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டனர்.

சுற்றுலா- வழிபாட்டுத் தலங்கள்

கன்னியாகுமரி உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத்தலங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். அங்குள்ள காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம், கடலின் நடுவே பாறையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை போன்றவற்றில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அயோத்தி தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்திருந்தது. இதனால் கன்னியாகுமரி கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் மாவட்டம் முழுவதிலும் உள்ள மும்மத வழிபாட்டு தலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில், நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளிட்ட அனைத்து பிரசித்தி பெற்ற கோவில்கள், நாகர்கோவில் வடசேரி பள்ளி வாசல், திருவிதாங்கோடு பள்ளிவாசல், குளச்சல், குலசேகரம், தேங்காப்பட்டணம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள், தர்காக்கள், நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய பகுதி உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் போன்றவற்றிலும் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். மேலும் நாகர்கோவில் கோட்டார் இடலாக்குடி, இளங்கடை, மாதவலாயம், திருவிதாங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர்.

ரெயில்களிலும் பாதுகாப்பு

இதேபோல் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம், கே.பி.ரோட்டில் உள்ள பா.ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலகம், டி.வி.டி. காலனியில் உள்ள இந்து முன்னணி அலுவலகம் போன்ற இந்து அமைப்புகளின் அலுவலகங்கள் போன்றவற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம், வடசேரி பஸ் நிலையம் உள்ளிட்ட மாவட்டப் பகுதிகளில் உள்ள பஸ் நிலையங்கள், முக்கிய சந்திப்புகள் போன்றவற்றிலும் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். மேலும் மாவட்டம் முழுவதிலும் முக்கிய சந்திப்பு பகுதிகள் அனைத்திலும் வாகன சோதனையும் நடந்தது. கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள லாட்ஜ்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் தங்கி உள்ளனரா? எனவும் போலீசார் சோதனை செய்தனர்.

நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம், டவுண் ரெயில் நிலையம், கன்னியாகுமரி, இரணியல், குழித்துறை உள்ளிட்ட ரெயில் நிலையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் போலீசார் நடைமேடைகளிலும், ரெயில் தண்டவாளங்களிலும் பலத்த சோதனை நடத்தினர். நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் வழியாக வந்து சென்ற ரெயில்களிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டார்கள். மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த பாதுகாப்பு பணியில் 1,000-க்கும் மேற்பட்டபோலீசார் ஈடுபட்டனர்.

வழக்கம்போல் இயங்கிய பஸ்கள்

அயோத்தி தீர்ப்பை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் ஒருசில பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. நாகர்கோவில் நகரில் நேற்று சாலைகளில் மக்கள் போக்குவரத்தும், கார் உள்ளிட்ட வாகனங்களின் போக்குவரத்தும் குறைவாக இருந்தது.

அரசு பஸ்களை பொறுத்தவரையில், வழக்கம்போல் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டல அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story