அயோத்தி வழக்கில் தீர்ப்பு: மாவட்டத்தில் 700 போலீசார் பாதுகாப்பு


அயோத்தி வழக்கில் தீர்ப்பு: மாவட்டத்தில் 700 போலீசார் பாதுகாப்பு
x
தினத்தந்தி 9 Nov 2019 11:00 PM GMT (Updated: 9 Nov 2019 8:38 PM GMT)

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல்,

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. நாமக்கல் மாவட்டத்திலும் நேற்று வழிபாட்டு ஸ்தலங்கள், மத்திய, மாநில முக்கிய அரசு அலுவலகங்கள், ரெயில் நிலையம், பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

நாமக்கல் நகரை பொறுத்த வரையில் மணிக்கூண்டு, பஸ்நிலையம், ரெயில்நிலையம், ஆஞ்சநேயர் கோவில், நரசிம்மர் கோவில், பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்ட எல்லைகளில் உள்ள 8 சோதனை சாவடிகளிலும் விடிய, விடிய போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இது தவிர ஓட்டல்கள் மற்றும் லாட்ஜூகளிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

700 போலீசார் பாதுகாப்பு

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறியதாவது:-

மாவட்டம் முழுவதும் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து பகுதிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். சமூக வலைதளங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பிறர் மனதை புண்படுத்தும் வகையில் யார் பதிவுகளை வெளியிட்டாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ராசிபுரம்

அயோத்தி வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டதையொட்டி ராசிபுரம் ரெயில்வே நிலையம், கோவில்கள், பஸ் நிலையம் உள்பட முக்கிய இடங்களில் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் மேற்பார்வையில் ராசிபுரம் போலீஸ் உட்கோட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.

Next Story