அயோத்தி வழக்கில் தீர்ப்பு: ஜனநாயகம், அரசியல் சாசனத்தின் வெற்றி ; முதல்-மந்திரி எடியூரப்பா கருத்து


அயோத்தி வழக்கில் தீர்ப்பு: ஜனநாயகம், அரசியல் சாசனத்தின் வெற்றி ; முதல்-மந்திரி எடியூரப்பா கருத்து
x
தினத்தந்தி 10 Nov 2019 12:15 AM GMT (Updated: 9 Nov 2019 9:21 PM GMT)

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு ஜனநாயகம், அரசியல் சாசனத்தின் வெற்றி என்று முதல்-மந்திரி எடியூரப்பா கருத்து தெரிவித்து உள்ளார்.

பெங்களூரு, 

அயோத்தியில் ராமஜென்மபூமி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்று உள்ளனர். அதே போல் முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட கர்நாடக அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வரவேற்று இருக்கிறார்கள். முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று இதுபற்றி நிருபர்களிடம் கூறியதாவது:-

நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக வாழ்ந்து வருகிறோம். சமூக நல்லிணக்கத்துடன் அமைதியான வாழ்க்கையை வாழ்கிறோம். ஒரு சாதாரண குடிமகனாக மற்றும் அரசியல் சாசன பதவியில் இருப்பவராக சுப்ரீம் கோர்ட்டு இன்று (அதாவது நேற்று) வழங்கியுள்ள தீர்ப்பை நான் வரவேற்கிறேன். இந்த தீர்ப்பு ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தின் வெற்றி. இந்த தீர்ப்பை, நம்மையும், நமது அரசியல் சாசனத்தையும் சந்தேகத்துடன் பார்ப்பவர்களுக்கு தக்க பதில் ஆகும். நமது மாண்புகள், தத்துவங்களை இந்த உலகத்தின் முன்பு எடுத்துக்காட்டும் ஒரு பெரிய நாடு என்பதை வெளிப்படுத்தியுள்ளோம்.

இங்கு மாண்புகள் மற்றும் தத்துவங்களுக்கு மரியாதை உள்ளது என்பதை வெளிப்படுத்தி காட்டியுள்ளோம். அனைவரும் அமைதியாக பின்பற்ற வேண்டும், எந்த குழப்பத்திற்கும் மதிப்பு கொடுக்க வேண்டாம் என்று மிகுந்த அக்கறையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு குறித்து முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறியதாவது:-

அயோத்தி வழக்கில், இருதரப்பையும் திருப்திபடுத்தும் வகையில் தீர்ப்பு அமைந்து உள்ளது. இதை நான் வரவேற்கிறேன். 300 முதல் 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாபர் மசூதியை ஏழை மக்கள் கட்டமைத்தனர். இந்த நிலத்திற்காக போராடி வரும் சிறுபான்மையின நண்பர்களை குறை சொல்ல முடியாது. கடந்த காலங்களில் என்ன நடந்ததோ, அது மிகப்பெரிய விவகாரம். அதனால் நான் கடந்த காலத்திற்குள் செல்ல விரும்பவில்லை.

இவ்வாறு தேவேகவுடா தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

ராமஜென்மபூமி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும். அமைதி, அஹிம்சையை வெளிப்படுத்தும் நமது நாட்டின் கொள்கையை பின்பற்ற வேண்டும்.

நாம் அனைவரும் சமூக நல்லிணக்கத்துடன் தொடர்ந்து வாழ்ந்து, வளர்ச்சியின் பக்கம் கவனம் செலுத்த வேண்டும். உணவு வழங்கும் கடவுளை (விவசாயி) போல் வேறு எந்த கடவுளும் இல்லை. ராமர் கோவிலை கட்டமைப்பதுடன், விவசாயிகளின் வாழ்க்கையை முன்னேற்றுவோம்.

இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு குறித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான முன்னாள் மந்திரி ரோஷன் பெய்க் கூறும்போது, “ராமர் கோவில் இந்தியாவில் கட்டாமல் பாகிஸ்தானிலா கட்ட முடியும்?. இதை நான் ஓராண்டுக்கு முன்பே கூறினேன். அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறேன். இந்த தீர்ப்பை எதிர்த்து சன்னி வக்பு வாரியம், மேல்முறையீடு செய்வதாக தகவல் அறிந்தேன். அந்த முடிவை அவர்கள் கைவிட வேண்டும். சமூக நல்லிணக்கத்துடன் அனைவரும் அமைதியாக வாழ வேண்டும். அனைவருக்கும் சம உரிமை வேண்டும்“ என்றார்.

Next Story