குடிநீர் சீராக வழங்கக்கோரி, சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள் - அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு


குடிநீர் சீராக வழங்கக்கோரி, சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள் - அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
x
தினத்தந்தி 12 Nov 2019 10:30 PM GMT (Updated: 12 Nov 2019 9:51 PM GMT)

உடுமலை அருகே குடிநீர் சீராக வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட பொதுமக்கள் முயன்றனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியல் முயற்சியை கைவிட்டனர்.

உடுமலை

உடுமலையை அடுத்துள்ள போடிப்பட்டி ஊராட்சிக்குட்பட்டது சுண்டக்காம்பாளையம் கிராமம். இங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்திற்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வருவதில்லை என்று கூறப்படுகிறது.‌ காலம் கடந்து குடிநீர் வந்தாலும் குறைந்த நேரமே வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக அந்த கிராமத்தைச்சேர்ந்த பொதுமக்கள் கூறினர். குடிநீர் தட்டுப்பாட்டைப்போக்கி தேவையான அளவு சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அங்கிருந்து புறப்பட்டு பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் ராகல்பாவி பிரிவு அருகே சாலை மறியல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாகக்கூறப்படுகிறது.

இதற்காக சுண்டக்காம்பாளையத்தில் உள்ள மேல்நிலைக்குடிநீர் தொட்டிக்கு அருகே 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்ட னர். பெண்கள் காலிக்குடங்களுடன் திரண்டு சாலை மறியலுக்கு முயன்றனர்.

இது பற்றிய தகவல் கிடைத்ததும் உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) கே.ஜீவானந்தம், அங்கு விரைந்து சென்று சாலை மறியலுக்கு புறப்பட தயாராக இருந்த பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் சீரான குடிநீர் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story