கோவில்பட்டி அருகே பரிதாபம், மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி


கோவில்பட்டி அருகே பரிதாபம், மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி
x
தினத்தந்தி 14 Nov 2019 11:00 PM GMT (Updated: 14 Nov 2019 11:43 PM GMT)

கோவில்பட்டி அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த மந்திதோப்பு வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துராஜ். சமையல் தொழிலாளி. இவருடைய மனைவி உமா மகேசுவரி. இவர்களுடைய மகன் பிரவீன்குமார் (வயது 4). இவன் கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் எல்.கே.ஜி. படித்து வந்தான்.

பிரவீன்குமாருக்கு கடந்த 4-ந்தேதி காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவனுக்கு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் காய்ச்சல் குணமாகவில்லை.

இதையடுத்து கடந்த 11-ந்தேதி பிரவீன்குமாரை கோவில்பட்டி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அங்கும் காய்ச்சல் குணமாகாததால், பிரவீன்குமாரை மேல் சிகிச்சைக்காக நெல்லை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். அங்கு நேற்று அதிகாலையில் பிரவீன்குமாருக்கு வலிப்பு ஏற்பட்டது. பின்னர் சிறிதுநேரத்தில் அவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

அவனது உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. கோவில்பட்டி அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story