உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும் - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி


உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும் - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி
x
தினத்தந்தி 16 Nov 2019 10:30 PM GMT (Updated: 16 Nov 2019 7:49 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி அளித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாவட்ட கலெக்டர் சிவஞானம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரபிரபா முத்தையா மற்றும் ராஜவர்மன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பயனாளிகளுக்கு இருசக்கரவாகனம், இலவசவீட்டுமனைபட்டா, இலவசஆடுகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மக்கள் எங்கள் பக்கம் உள்ளதால் உள்ளாட்சி் தேர்தலில் நல்லாட்சி நாயகன் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க.வெற்றி பெறும்.

விருதுநகர் மாவட்டம் அ.தி.மு.க.வின் இரும்புக்கோட்டை என்பதை நிரூபிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மத்தியகூட்டுறவு வங்கித்தலைவர் மயில்சாமி, நிலவளவங்கி தலைவர்முத்தையா, நகர வங்கி தலைவர் பாலசுப்பிரமணி, துணைத்தலைவர் மீரா, தனலட்சுமி,முருகன், எம்.ஜி.ஆர். இளைஞர்அணி செயலாளர் சிந்துமுருகன், நகர செயலாளர் இன்பத் தமிழன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியமாரியம்மன் கோவில் அருகே நகர் அ.தி. மு.க. சார்பில் திருமண மண்டபத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமை தாங்கி பேசும்போது, உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எடப்பாடியார் ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் அனைத்து மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் சீரான முறையில் கிடைத்துவருகிறது. தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. 

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளதால் அ.தி.மு.க. வெற்றிக்கு கடுமையாக உழைக்கவேண்டும். கட்சியில் உழைப்பவருக்கு பதவிகள் தேடிவரும். தி.மு.க.வினர் தேர்தலை எதிர்கொள்ள தயங்குகின்றனர். இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இன்பத்தமிழன், எம்.எல்.ஏ.க்கள் ராஜவர்மன், சந்திரபிரபா, ஒன்றிய செயலாளர்கள் மயில்சாமி, முத்தையா, சுப்புராஜ், சேதுராமலிங்கம் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Next Story