வேலாயுதம்பாளையம் அருகே போலீசார்-பொதுமக்கள் இடையே நல்லுறவு கபடி போட்டி; திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பங்கேற்பு


வேலாயுதம்பாளையம் அருகே போலீசார்-பொதுமக்கள் இடையே நல்லுறவு கபடி போட்டி; திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பங்கேற்பு
x
தினத்தந்தி 17 Nov 2019 10:15 PM GMT (Updated: 17 Nov 2019 8:01 PM GMT)

வேலாயுதம்பாளையம் அருகே போலீசார்- பொதுமக்கள் இடையே நல்லுறவு கபடி போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

நொய்யல், 

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், காவல்துறை சார்பில் போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவு கபடி போட்டி வேலாயுதம்பாளையம் அருகே பாரதவிலாஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 8 அணியினர் கலந்து கொண்டு விளையாடினர். கபடி போட்டி நடுவர்களாக மணிமாறன் அண்ணாதுரை மற்றும் மகேந்திரன் ஆகியோர் செயல்பட்டனர். இதில் முதல்பரிசை போலீஸ் அணியும், 2-வது பரிசை செவ்வந்தி பாளையம் ரெயின்போ அணியும் பெற்றன.

அதனை தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தம்பிதுரை முன்னிலை வகித்தார். அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்யாணகுமார் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசு வழங்கினார்.

பின்னர் வெற்றி பெறாத அணிகளுக்கும் ரூ.2 ஆயிரத்தை தோகைமலை முருகன் வழங்கினார். சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ரூ.ஆயிரம் சிறப்பு பரிசாக திருமலை வழங்கினார். இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுசாமி நன்றி கூறினார்.

Next Story