கட்டிடங்களுக்கு அனுமதி வழங்க கட்டுப்பாடு: மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்


கட்டிடங்களுக்கு அனுமதி வழங்க கட்டுப்பாடு: மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Nov 2019 10:00 PM GMT (Updated: 17 Nov 2019 9:11 PM GMT)

கட்டிடங்களுக்கு அனுமதி வழங்க கட்டுப்பாடுவிதித்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோத்தகிரியில் இந்திய மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோத்தகிரி,

கட்டிடங்களுக்கு அனுமதி வழங்க கட்டுப்பாடுவிதித்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோத்தகிரியில் இந்திய மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கட்டுப்பாடுகள்

நீலகிரி மாவட்டத்தில் 81 இடங்கள் அபாயகரமானதாக வருவாய்த்துறை அறிவித்து உள்ளது. அந்த இடங்களில் கட்டிடங்களுக்கு அனுமதி வழங்க அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் கட்டிடங்களுக்கு எளிதில் அனுமதி கிடைக்காத நிலை உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கட்டிடங்களுக்கு அனுமதி வழங்க அதிகாரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நீலகிரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோத்தகிரி உள்பட 6 தாலுகாக்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆர்ப்பாட்டம்

அதன்படி நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோத்தகிரி மார்க்கெட் திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில குழு உறுப்பினர் பத்ரிநாத் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சோழா மகே‌‌ஷ், வட்டார குழு உறுப்பினர் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட நிர்வாகம் விதித்து உள்ள கட்டுப்பாடுகளால் கட்டுமான தொழில் பாதிக்கப்படும். மேலும் ரியல் எஸ்டேட், வாடகை லாரி போன்ற தொழில்களை சார்ந்திருப்போரும் பொருளாதார ரீதியில் ந‌‌ஷ்டத்தை சந்திப்பார்கள்.

எனவே மாவட்ட நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகளை தளர்த்தி கொள்ள முன்வர வேண்டும் என்று கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் கட்டுப்பாடுகளை தளர்த்த கோரி வருகிற 28-ந் தேதி அனைத்து அமைப்புகள் சார்பில் நீலகிரி மாவட்டம் முழுவதும் நடைபெறும் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

முடிவில் வட்டார செயலாளர் தங்கவேல் நன்றி கூறினார். இதேபோன்று பந்தலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story