மூடப்பட்ட ரெயில்வே கேட்டை கடக்க முயற்சி: ஓடும் ரெயிலில் மோட்டார் சைக்கிள் சிக்கி போலீஸ் ஏட்டுக்கு கால் முறிவு


மூடப்பட்ட ரெயில்வே கேட்டை கடக்க முயற்சி: ஓடும் ரெயிலில் மோட்டார் சைக்கிள் சிக்கி போலீஸ் ஏட்டுக்கு கால் முறிவு
x
தினத்தந்தி 19 Nov 2019 10:00 PM GMT (Updated: 19 Nov 2019 6:21 PM GMT)

ஆவடி அருகே மூடப்பட்ட ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற போது, போலீஸ் ஏட்டுவின் மோட்டார் சைக்கிள் ஓடும் ரெயிலில் சிக்கியதில் கால் முறிந்தது.

ஆவடி,

ஆவடி அடுத்த வீராபுரம் பகுதியை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 46). இவர் திருமுல்லைவாயல் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆவடி அண்ணனூர் சிவசக்தி நகரை சேர்ந்த சாய்ராம் (49) என்பவரது வீட்டில் எல்.சி.டி. டி.வி., மடிக்கணினி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றார். இதையடுத்து, அந்த நபர் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரை பிடிக்க நேற்று காலை சவுந்தர ராஜன் கை விலங்கை எடுத்துக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அவருடன் ஊர்க்காவல் படையை சேர்ந்த கிருபா என்பவரும் உடன் சென்றார்.

காலில் எலும்பு முறிவு

அப்போது சவுந்தரராஜன் அண்ணனூர் ரெயில் நிலையம் அருகே சென்றபோது ரெயில்வே கேட் மூடப்பட்டு இருந்தது. இதனால் மோட் டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். அப்போது சென்னை நோக்கி வந்த திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிளின் முன்பகுதியை உரசிச்சென்றதில் சிக்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக கிருபாவுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

இதில் திடீரென தூக்கி வீசப்பட்ட சவுந்தரராஜனின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் வலியால் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சென்னையில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story