தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு: முன்னாள் துணைவேந்தர் உள்பட 4 பேர் மீது வழக்கு


தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு: முன்னாள் துணைவேந்தர் உள்பட 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 19 Nov 2019 10:30 PM GMT (Updated: 19 Nov 2019 6:57 PM GMT)

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் துணைவேந்தர் உள்பட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் கடந்த 1981-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கப்பட்டது. தமிழ்மொழி, பண்பாடு போன்ற துறைகளில் உயர் ஆய்வை நோக்கமாக கொண்டது. தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் 11-வது துணைவேந்தராக பாஸ்கரன் பொறுப்பு ஏற்றார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை இந்த பொறுப்பை வகித்தார்.

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் புதிதாக பேராசிரியர், இணை பேராசிரியர்கள் நியமனம் செய்வதற்கான நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றவர்களில் இருந்து சிலர் தேர்வு செய்யப்பட்டனர். அப்படி தேர்வு செய்யப்பட்ட 10 பேராசிரியர்கள், 11 இணை பேராசிரியர்கள் என மொத்தம் 21 பேர் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நியமனம் செய்யப்பட்டனர்.

முறைகேடு

இந்த நியமனத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தன. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். இந்த நிலையில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு, விதிமீறல் நடைபெற்றுள்ளதாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை நீதிபதி விசாரணை செய்து இந்த புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் இப்புகார் தொடர்பாக விசாரணை நடத்தினார். முதல்கட்ட விசாரணையில், தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நியமனம் செய்யப்பட்ட பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் 21 பேரும் தகுதியற்றவர்கள் என்பது தெரியவந்தது.

அனுபவம் இல்லை

மேலும் அவர்களில் பலருக்கு போதியஅளவு முதுகலை ஆசிரியர் அனுபவம் இல்லாததும், பலர் முனைவர் பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டுனராக செயல்படவில்லை என்பதும், பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு விதிகள் கடைபிடிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி முறைகேடாகவும், விதிமுறைகளை மீறியும் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நேர்முக தேர்வில் தேர்வுக்குழு உறுப்பினர்கள் அதிக மதிபெண்களை வழங்கியதும், நேர்முக தேர்வு நடைபெறுவதற்கு முன்பாக 10 பேரிடம் ரூ.15 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை லஞ்சம் பெற முயற்சி செய்துள்ளதும் விசாரணையில் தெரிந்தது.

இதேபோல் தமிழ்ப் பல்கலைக்கழக விதிமுறைகளை மீறி 70 ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் தினக்கூலி அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு அரசு நிதிஉதவி மற்றும் தமிழ்பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி வருவாயில் இருந்து ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட இவர்கள் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதால் தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு நிதி இழப்பு ஏற்படுகிறது என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

4 பேர் மீது வழக்கு

இதையடுத்து முன்னாள் துணைவேந்தர் க.பாஸ்கரன், முன்னாள் பதிவாளர் ச.முத்துக்குமார், முன்னாள் பதிவாளரின் நேர்முக உதவியாளர் ஜி.சக்தி சரவணன், தொலைநிலைக் கல்வி முன்னாள் இயக்குனர் என்.பாஸ்கரன் ஆகிய 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 120(பி) (குற்றச்சதி), 409(நம்பிக்கை மோசடி), 420(ஏமாற்றி நேர்மையின்றி பொருளை பெறுதல் அல்லது கொடுக்கும்படி செய்தல்), 471(பொய்யாக புனையப்பட்டு உண்மையானதாக பயன்பாடு செய்தல்), ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 7 (அரசு ஊழியர் சட்டவிரோதமாக பணம் பெறுதல்), 13(1)(சி), 13(1)(டி), 13(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார், முதல் தகவல் அறிக்கையை கும்பகோணத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story