ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு


ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 Nov 2019 10:45 PM GMT (Updated: 19 Nov 2019 7:37 PM GMT)

ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு.

உடையார்பாளையம்,

ஜெயங்கொண்டம் பகுதியில் இந்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் மூலம் தேவா மங்கலம், சோழன்குறிச்சி, பிராஞ்சேரி, புதுக்குடி தெற்கு கரைமேடு, குருவாலப்பர் கோவில் உள்ளிட்ட இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்ட சோதனைக்காக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டது. இதற்கு பலவகைகளில் போராட்டம் நடத்தி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினரின் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பூங்கோதை தலைமை தாங்கினார். பேச்சுவார்த்தையின்போது, ஓ.என்.ஜி.சி. பொது மேலாளர் சாய் பிரகா‌‌ஷ், தலைமை பொது மேலாளர் ரவிச்சந்திரன், உதவி பொது மேலாளர்கள் காந்தி, ராஜசேகர் மற்றும் மோகனகிரு‌‌ஷ்ணன், லோகநாதன் விக்ரநாத், தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் மாநிலத் தலைவர் ஜான் பீட்டர் உள்பட பல அலுவலர்களும், இலையூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், புதுக்குடி தெற்கு கரைமேடு பூபதி, ராஜேந்திரன் உள்பட பல கிராம மக்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் ஓ.என்.ஜி.சி. அலுவலர்கள் இத்திட்டத்தை நிறைவேற்றும் போது பொதுமக்களுக்கு கிடைக்கும் சலுகைகள் பற்றி கூறினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், ஹைட்ரோகார்பன் திட்டத்தால் இப்பகுதியில் வாழ்வாதாரம் பாதிக்கும். அதனால் இத்திட்டத்தை இப்பகுதியில் செயல்படுத்த கூடாது என கூறினர். மீண்டும் இத்திட்டத்தை இப்பகுதியில் செயல்படுத்த முயன்றால் பெரிய போராட்டத்தை அரசு சந்திக்க நேரிடும் என்று பொதுமக்கள் கூறிவிட்டு அலுவலகத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story