அணைகள் நீர்மட்டம் உயர்கிறது: நெல்லையில் பலத்த மழை கோவில் தெப்பக்குள சுவர் இடிந்தது


அணைகள் நீர்மட்டம் உயர்கிறது: நெல்லையில் பலத்த மழை கோவில் தெப்பக்குள சுவர் இடிந்தது
x
தினத்தந்தி 19 Nov 2019 10:45 PM GMT (Updated: 19 Nov 2019 8:42 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக அணைகள் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கோவில் தெப்பக்குள சுவர் இடிந்து விழுந்தது.

நெல்லை,

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. நெல்லையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. காலை 10 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இதனால் நெல்லை, பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம், பேட்டை பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

பாளையங்கோட்டை ராமசாமி கோவில் தெப்பக்குளத்தின் வடக்கு பகுதி சுவர் வலுவிழந்து காணப்பட்டது. இந்த சுவர், தொடர் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் நேற்று காலை திடீரென இடிந்து விழுந்தது. இதையடுத்து தெப்பக்குள கரைப்பகுதிக்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது.

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

தொடர் மழையால் அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. சரிந்து கொண்டிருந்த பாபநாசம் அணை நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து உள்ளது. நேற்று முன்தினம் 129.90 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 131.40 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 1,539 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 239 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல் 143.83 அடியாக இருந்த சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 145.83 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து மழை நீடித்தால் பாபநாசம், சேர்வலாறு அணைகள் இன்னும் ஓரிரு நாட்களில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 68.90 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 416 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்துக்காக மணிமுத்தாறு பெருங்காலில் 35 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதுதவிர கடனா, குண்டாறு, அடவிநயினார் ஆகிய அணைகள் நிரம்பி இருப்பதால் அணைக்கு வருகிற தண்ணீர் உபரி நீராக திறக்கப்பட்டு உள்ளது. கருப்பாநதி அணை நீர்மட்டமும் உச்சத்தில் உள்ளது.

அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பதால் நெல்லை மாவட்டத்தில் விவசாயிகள் நெல் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இதுதவிர மானாவாரி பகுதியில் கிணற்று பாசனம் மூலம் நெல் நாற்று பாவுதல் மற்றும் நடவு செய்தல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர். மானாவாரி குளங்கள் பெரும்பாலும் நிரம்பாமல் இருப்பதால் அந்த பகுதியில் கூடுதலாக மழை பெய்யுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

அம்பை -25, ஆய்குடி -13, நாங்குநேரி -2, பாளையங்கோட்டை -7, ராதாபுரம் -7, சங்கரன்கோவில் -1, செங்கோட்டை -2, சிவகிரி -7, தென்காசி -13, நெல்லை -5.

அணை பகுதிகளில் பாபநாசம் -14, சேர்வலாறு -36, மணிமுத்தாறு -9, கருப்பாநதி -28, குண்டாறு -6, அடவிநயினார் -18.

Next Story