சேலம் செவ்வாய்பேட்டையில் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல்


சேலம் செவ்வாய்பேட்டையில் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 19 Nov 2019 11:00 PM GMT (Updated: 19 Nov 2019 8:59 PM GMT)

சேலம் செவ்வாய்பேட்டையில் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சேலம்,

சேலம் செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட் பகுதியில் உள்ள தெருக்களில் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சமீபத்தில் பெய்த மழையால் சாலையில் கற்கள் பெயர்ந்து மேலும் மோசமடைந்தது.

சிறிய அளவில் இருந்த பள்ளங்கள் பெரிய அளவில் ஏற்பட்டு போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இதுமட்டுமல்லாமல் தோண்டப்பட்ட பாதாள சாக்கடை குழியில் மழைநீர் தேங்கி சாலையில் ஒரு புறமாக வழிந்தோடுகிறது.

இதனால் லாரிகள், சரக்கு ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து சரக்கு ஏற்றி செல்லும் பெரும்பாலான லாரிகள் இந்த சாலை வழியே செல்வதால், இங்குள்ள பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்படுகிறது.

சாலை மறியல்

இதைத்தொடர்ந்து சாலையை சீரமைக்க கோரி வாகன ஓட்டிகள் உள்பட அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்ததுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் நேற்று இந்த பகுதியில் உள்ள இளம்பிள்ளை ரோட்டுக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென சாலையை சீரமைக்க கோரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த செவ்வாய்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், சேலத்தின் முக்கியமான சாலை செவ்வாய்பேட்டை சாலை ஆகும். இங்கு மார்க்கெட், வணிக நிறுவனங்கள், மளிகை கடைகள், டீக்கடைகள், லாரி மார்க்கெட், லீ பஜார் போன்றவை செயல்பட்டு வருகின்றன. இதனால் தினமும் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் விபத்தில் சிக்கி காயம் அடைகிறார்கள். சில நேரங்களில் சாலையில் போலீசார் நின்றுகொண்டு இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் ஹெல்மெட் அணியாமல் வந்தால், அவர்களை பிடித்து அபராதம் விதிக்கின்றனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் வேகமாக சென்று பள்ளத்தில் விழுந்து விடுகின்றனர். சாலையின் அருகே உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகளும் அவதிப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பரபரப்பு

இதைக்கேட்ட போலீசார் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து போக்குவரத்து நெரிசலை போலீசார் சரிசெய்தனர். சுமார் ½ மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story