“இடைத்தேர்தலில், யார் வெற்றி பெற வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்” எடியூரப்பா பேட்டி


“இடைத்தேர்தலில், யார் வெற்றி பெற வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்” எடியூரப்பா பேட்டி
x
தினத்தந்தி 19 Nov 2019 11:12 PM GMT (Updated: 19 Nov 2019 11:12 PM GMT)

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு,

முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தன்வீர் சேட் எம்.எல்.ஏ. தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ஒரு அமைப்பின் பெயர் அடிபடுகிறது. சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது, பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பு மீது இருந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. எந்த காரணத்திற்காக அந்த வழக்குகள் ரத்து செய்யப்பட்டன என்பதை சித்தராமையா கூற வேண்டும்.

மைசூரு மற்றும் சிவமொக்கா ஆகிய மாவட்டங்களில் நடந்த மதக்கலவரங்களில் ஒருவர் மரணம் அடைந்தார். இது தொடர்பாக போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. இதுபற்றி சித்தராமையா மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறார்?. அந்த பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்புக்கு சித்தராமையா அரசு மறைமுகமாக ஆதரவு கொடுத்தது. இதன் எதிரொலியாக தான் தன்வீர்சேட் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதுபற்றி காங்கிரஸ் கட்சியினர் என்ன சொல்கிறார்கள்?. இடைத்தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். டிசம்பர் 9-ந் தேதி தேர்தல் முடிவுகள் வரும்போது, வெற்றி பெறுபவர்கள் யார் என்பது தெரியவரும். அதுவரை இதுபற்றி நான் எதுவும் பேச மாட்டேன்.காங்கிரஸ் கட்சியில் உள்ள பிற தலைவர்களின் ஆதரவு சித்தராமையாவுக்கு கிடைக்கவில்லை. அவர் தனியாக பிரசாரம் செய்து வருகிறார். அதனால் அவர் முதலில் தனது கட்சியில் உள்ள குளறுபடிகளை சரிசெய்துகொண்டு, அதன் பிறகு எங்களை பற்றி விமர்சிக்கட்டும். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story