தேன்கனிக்கோட்டை அருகே பெண் அடித்துக்கொலை போலீசார் விசாரணை


தேன்கனிக்கோட்டை அருகே பெண் அடித்துக்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 20 Nov 2019 10:15 PM GMT (Updated: 20 Nov 2019 7:22 PM GMT)

தேன்கனிக்கோட்டை அருகே பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேன்கனிக்கோட்டை,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது பெரியபூதுக்கோட்டை கிராமம். இந்த கிராமத்தில் அய்யூர் செல்லும் சாலையில் பஸ் நிறுத்தம் அருகில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதைப் பார்த்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் இது தொடர்பாக சந்தனப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் பழனிக்கு தகவல் கொடுத்தனர்.

இது குறித்து அவர் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதாவும் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

போலீசார் விசாரணை

ஆனால் இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. அவரது முகத்தில் ரத்தகாயங்கள் இருந்தது. அவரை மர்ம நபர்கள் அடித்துக்கொலை செய்து உடலை இப்பகுதியில் வீசி சென்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அப்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பெண் யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்த நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story