தென்காசி புதிய மாவட்டம் நாளை தொடக்கம்: விழா நடைபெறும் இடத்தை அமைச்சர் உதயகுமார் பார்வையிட்டார்


தென்காசி புதிய மாவட்டம் நாளை தொடக்கம்: விழா நடைபெறும் இடத்தை அமைச்சர் உதயகுமார் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 20 Nov 2019 11:15 PM GMT (Updated: 20 Nov 2019 9:06 PM GMT)

தென்காசி புதிய மாவட்ட தொடக்க விழா நாளை நடக்கிறது. இந்த விழா நடைபெறும் இடத்தை அமைச்சர் உதயகுமார் பார்வையிட்டார்.

தென்காசி,

நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தனி மாவட்டமாக உருவாக்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை மாதம் 18-ந் தேதி அறிவித்தார். அதன்படி, தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வீரகேளரம்புதூர், சங்கரன்கோவில், திருவேங்கடம், ஆலங்குளம் ஆகிய 8 தாலுகாக்களுடன் தென்காசி புதிய மாவட்ட அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த மாவட்ட தொடக்க விழா தென்காசி இசக்கி மகால் வளாகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை நடக்கிறது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

அமைச்சர் உதயகுமார்

இந்த நிலையில் விழா நடைபெறும் இடத்தை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று காலையில் பார்வையிட்டார். பின்னர் இசக்கி மகாலில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

தென்காசி புதிய மாவட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கப்படுகிறது. புதிய மாவட்டம் தொடங்க சட்டமன்றத்தில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்து, குரல் கொடுத்தார். அதில் அவர் வெற்றி பெற்று, இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி உள்ளார்.

புதிய மாவட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தென்காசியில் தொடங்கி வைக்கிறார். மாவட்ட தொடக்க விழாவில் 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். ஏற்கனவே முடிக்கப்பட்ட பணிகள் தொடங்கப்படுகின்றன. அவை அனைத்தையும் இந்த இடத்திலேயே முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். முதல்-அமைச்சர் ஏற்கனவே அறிவித்த மாவட்டங்களிலேயே முதன்முதலாக தென்காசியை தேர்வு செய்து இங்கு வருகிறார். அப்படி என்றால் இந்த தென்காசி பகுதி மக்கள் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கை, அன்பை காட்டுகிறது.

பாதுகாப்பான மாநிலம்

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் வெட்டவெளியில் அமர்ந்து கலாசார நிகழ்வுடன் பேசினர். இது தமிழகம் பாதுகாப்பான மாநிலம் என்பதை காட்டுகிறது. அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் சிறந்த நல்லாட்சி நடைபெற்று வருகிறது என்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். மாவட்ட கலெக்டர், அதிகாரிகள் மிகுந்த ஒத்துழைப்பு தந்துள்ளனர். காவல்துறை அதிகாரிகள் மிகுந்த அளவில் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். முதல்-அமைச்சர் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வேண்டும். அதேநேரத்தில் வருகின்ற மக்கள் சிரமம் இல்லாமல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும். அதற்கு தகுந்த ஏற்பாடுகளை செய்து கொடுக்க உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில், அமைச்சர் ராஜலட்சுமி, மாவட்ட செயலாளர்கள் கே.ஆர்.பி. பிரபாகரன் (புறநகர்), தச்சை கணேசராஜா (மாநகர்), எம்.எல்.ஏ.க்கள் செல்வமோகன்தாஸ் பாண்டியன், மனோகரன், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர்கள் ஷில்பா (நெல்லை), அருண் சுந்தர் தயாளன் (தென்காசி), தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங், பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் தேவி, உதவி பொறியாளர் பிரேமலதா, அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், நகர செயலாளர்கள் சுடலை, கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story