‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், கைதான மாணவர்களின் பெற்றோர் 4 பேர் தேனி கோர்ட்டில் ஆஜர்


‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், கைதான மாணவர்களின் பெற்றோர் 4 பேர் தேனி கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 21 Nov 2019 11:00 PM GMT (Updated: 21 Nov 2019 1:58 PM GMT)

நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர்களின் பெற்றோர் 4 பேர் தேனி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு டிசம்பர் 5- ந்தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டது.

தேனி,


‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா, அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன், மாணவர் பிரவீண், அவருடைய தந்தை சரவணன், மாணவர் ராகுல், அவருடைய தந்தை டேவிஸ், வாணியம்பாடியை சேர்ந்த மாணவர் இர்பான், அவருடைய தந்தை முகமது ‌ஷபி, தர்மபுரியை சேர்ந்த மாணவி பிரியங்கா, அவருடைய தாயார் மைனாவதி ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதில், மாணவி பிரியங்கா மற்றும் 4 மாணவர்களுக்கு மதுரை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. ஆனால், மாணவர்களின் பெற்றோர்கள் 5 பேருக்கும் ஜாமீன் கிடைக்கவில்லை. மாணவர்களின் பெற்றோர்களில் மைனாவதி, டாக்டர் வெங்கடேசன் ஆகியோர் மதுரை மத்திய சிறையிலும், சரவணன், டேவிஸ், முகமது ‌ஷபி ஆகியோர் தேனி மாவட்ட சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் 5 பேருக்கும் நேற்று வரை காவல் நீட்டிக்கப்பட்டு இருந்தது. கோர்ட்டு காவல் முடிவடைய இருந்த நிலையில், சரவணன், டேவிஸ், முகமது ‌ஷபி, மைனாவதி ஆகிய 4 பேரும் தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதற்காக அவர்களை சிறைகளில் இருந்து பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து வந்தனர். அவர்கள் அனைவரும் முகத்தை மூடியபடி கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

டாக்டர் வெங்கடேசனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளதால் அவரை நேரில் அழைத்து வந்து ஆஜர்படுத்த இயலவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 4 பேருக்கும், சிறையில் உள்ள டாக்டர் வெங்கடேசனுக்கும் அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந்தேதி வரை காவலை நீட்டித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மைனாவதி மதுரை மத்திய சிறையிலும், சரவணன், டேவிஸ், முகமது ‌ஷபி ஆகிய 3 பேரும் தேனி மாவட்ட சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

Next Story