தீவட்டிப்பட்டியில் பல்பொருள் அங்காடியில் தீ; ரூ.1 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்


தீவட்டிப்பட்டியில் பல்பொருள் அங்காடியில் தீ; ரூ.1 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 21 Nov 2019 10:15 PM GMT (Updated: 21 Nov 2019 8:35 PM GMT)

தீவட்டிப்பட்டியில் பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட தீயில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

ஓமலூர்,

ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி நாச்சினம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 42). எல்.ஐ.சி. முகவராக உள்ளார். மேலும் இவர் நாச்சினம்பட்டி மற்றும் தீவட்டிப்பட்டி ஆகிய இடங்களில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தீவட்டிப்பட்டியில் உள்ள பல்பொருள் அங்காடியை பூட்டிவிட்டு நாச்சினம்பட்டியில் உள்ள வீட்டுக்கு சென்றார். இதனிடையே நள்ளிரவு 2 மணியளவில் தீவட்டிப்பட்டியில் உள்ள பல்பொருள் அங்காடிக்குள் இருந்து புகை வந்துள்ளது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அங்காடி தீப்பிடித்து எரிவதாக பிரபாகரனுக்கு தகவல் கொடுத்தனர்.

ரூ.1 லட்சம் ெபாருட்கள்

இதுகுறித்து பிரபாகரன் ஓமலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தெரிவித்தார். தொடர்ந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று 1½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் அங்காடியில் இருந்த நோட்டு,புத்தகம், பேன்சி பொருட்கள், பள்ளி புத்தக பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் என ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

பின்னர் தீவட்டிப்பட்டி போலீசார் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story