பெங்களூருவில் பல்வேறு வழக்குகளில் தொடர்பு தமிழர்கள் உள்பட 57 பேர் கைது ரூ.1.30 கோடி பொருட்கள் மீட்பு


பெங்களூருவில் பல்வேறு வழக்குகளில் தொடர்பு தமிழர்கள் உள்பட 57 பேர் கைது ரூ.1.30 கோடி பொருட்கள் மீட்பு
x
தினத்தந்தி 23 Nov 2019 10:00 PM GMT (Updated: 23 Nov 2019 5:42 PM GMT)

பெங்களூருவில் பல்வேறு வழக்குகளில் தொடர்பு கொண்டதாக தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 57 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.1.30 கோடி பொருட்கள் மீட்கப்பட்டன.

பெங்களூரு,

பெங்களூரு கோரமங்களா போலீஸ் நிலையத்தில் நேற்று கிழக்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெங்களூருவில் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததாக தமிழகத்தை சேர்ந்த 4 பேரை மடிவாளா போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் வேலூரை சேர்ந்த திவாகர் என்ற அப்பு (வயது 20), முரளி ரஜினி (24), ஸ்ரீராம் (20), சதீஷ் (19) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 16 மோட்டார் சைக்கிள்கள், ஒரு டிராக்டர், ஒரு தண்ணீர் டேங்கர் ஆகியவை மீட்கப்பட்டன.

அதேபோல், பெங்களூருவில் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்டு வந்ததாக வில்சன் கார்டனை சேர்ந்த சிவாரசன் (வயது 19), பொம்மனஹள்ளியை சேர்ந்த சுகுமாரன் (21), தமிழ்நாடு திருவண்ணாமலையை சேர்ந்த விவேகானந்தன் (29), கஜேந்திரன் (44) மற்றும் சத்யமூர்த்தி (40) ஆகியோர் பேகூர் போலீசாரிடம் சிக்கினர். இவர்களிடம் இருந்தும் தங்க நகைகள் மீட்கப்பட்டது.

மேலும் பகலில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு இரவு நேரத்தில் பூட்டுகளை உடைத்து கைவரிசை காட்டிய 4 பேர் மைகோ லே-அவுட் போலீசாரிடம் சிக்கினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் நேபாளத்தை சேர்ந்த அசோக் சிங் (26), ராஜேஷ் தாபா (23), கணேஷ் கட்டா (24), கவிராஜ் ராவல் (20) என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ.13 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டன.

மொத்தத்தில் பெங்களூரு நகரில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 57 பேரை தென்கிழக்கு மண்டல போலீசார் கைது செய்துள்ளனர். கைதானவர்களிடம் இருந்து 2 கிலோ தங்க நகைகள், 4 கிலோ 600 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.1.55 லட்சம் ரொக்கம், 29 செல்போன்கள், 26 கிலோ 500 கிராம் கஞ்சா, 44 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஆட்டோ, 4 கார்கள், கேமராக்கள் மீட்கப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1.30 கோடியாகும். இதன்மூலம் மொத்தம் 56 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, மீட்கப்பட்ட பொருட்களை கூடுதல் போலீஸ் கமிஷனர் முருகன், துணை போலீஸ் கமிஷனர் ஈஷாபண்ட் ஆகியோர் பார்வையிட்டனர்.

Next Story