ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றபோது பெண்ணின் இடுப்பில் புகுந்த ஊசி, அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்


ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றபோது பெண்ணின் இடுப்பில் புகுந்த ஊசி, அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்
x
தினத்தந்தி 23 Nov 2019 11:15 PM GMT (Updated: 23 Nov 2019 6:54 PM GMT)

ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றபோது சீர்காழி பெண்ணின் இடுப்பில் புகுந்த ஊசி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

திருவாரூர்,

நாகை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவை சேர்ந்தவர் பார்வதி (வயது 54). இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் அவதிப்பட்டார். இதையடுத்து அங்கு உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சை பெற சென்றார்.

அங்கு பார்வதிக்கு இடுப்பில் ஊசி போடப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக ஊசி உடைந்து பார்வதியின் இடுப்புக்குள் புகுந்தது. இதை அறியாத பார்வதி வீட்டுக்கு சென்றார்.

அவருக்கு இடுப்பில் தொடர்ந்து வலி இருந்துள்ளது. இதனால் அவர் சீர்காழியில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு சென்றார். அங்கு அவருக்கு ‘எக்ஸ்ரே’ எடுக்கப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் வலி குறையவில்லை. வலி அதிகமாகி, அவர் அவஸ்தை பட்டு வந்தார்.

அறுவை சிகிச்சை

இந்த நிலையில் சீர்காழி அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ‘எக்ஸ்ரே’ மூலமாக பார்வதியின் இடுப்புக்குள் ஊசி புகுந்து இருப்பது தெரிய வந்தது. ஊசி உடலின் ஆழத்துக்கு சென்று விட்டதால், இங்கு ஊசியை எடுக்க முடியாது என சீர்காழி அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறி விட்டனர்.

மேலும் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று ஊசியை அகற்றி கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், பார்வதியை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஒரு மணிநேரம்...

அங்கு நேற்று மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துக்குமரன், கண்காணிப்பாளர் ராஜா ஆகியோர் மேற்பார்வையில் பார்வதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

டாக்டர்கள் ராஜப்பன், டேனியல், அன்சாரி, ரபீக், ‌ஷாபி, மயக்க மருந்து டாக்டர்கள் லெனின், கோகிலா ஆகிய 7 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர். ஒரு மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. இதில் பார்வதியின் உடலில் இருந்து ஊசி அகற்றப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் பார்வதிக்கு வலி குறைந்து உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Next Story